முகப்பு
உலகம்

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து: 16 பேர் பலி!

சிச்சுவான் மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து..

Updated On : 18 ஜூலை, 2024 at 6:46 AM
சீன வணிக வளாகத்தில் தீ விபத்து
பகிர்:

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.

சிச்சுவான் மாகாணத்தின் ஜிகோங் நகரில் உள்ள உயர் தொழில்நுட்ப மண்டலத்தில் அமைந்துள்ள 14 மாடி கட்டடத்தில் புதன்கிழமை மாலை 6 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் வெளியான கருப்பு புகைக் குறித்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் வெளியானது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரக்கால பணியாளர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்புப் பணி இன்று காலையுடன் நிறைவடைந்தது.

கட்டடத்திற்குள் சிக்கியிருந்த சுமார் 75 பேர் மீட்கப்பட்டதாக உள்ளூர் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். இந்த தீ விபத்தில் 16 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மீதமுள்ளவர்கள் கட்டடத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில், கட்டடத்தில் கட்டுமானப் பணிகள் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

சீனாவின் அவசரக்கால மேலாண்மை மற்றும் தேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு நிர்வாக அமைச்சகம், சம்பவம் குறித்து விசாரணை நடத்தக் குழு ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது.

உணவகங்கள் போன்ற பொது இடங்களில் ஏற்படும் தீ விபத்துகளுக்கு மின்சாரம் மற்றும் எரிவாயு குழாய்கள் பழுதடைந்ததே காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள வணிக கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்த மாதத்தில் நான்ஜிங் நகரில் குடியிருப்புக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →