50% வரி.. இந்தியாவை கிண்டலடிப்பதா? கொந்தளித்த இலங்கை எம்.பி.
இந்தியாவை கிண்டலடிப்பதா என்று இலங்கை எம்.பி. நாடாளுமன்றத்தில் கேள்வி.
அமெரிக்கா, இந்திய பொருள்களுக்கு 50 சதவீத வரி விதித்திருப்பது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் பேச்சு எழுந்தபோது, இந்தியாவை கிண்டலடிப்பதா, நம்முடைய மோசமான நேரத்தில் உதவியதே இந்தியாதான் என எம்.பி. டி சில்வா பேசியுள்ளார்.
இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை சிக்கலில் இருக்கும் நிலையில், அமெரிக்காவுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டது குறித்து இலங்கை எம்.பி.க்கள் சிலர் கிண்டலடித்துப் பேசியதாகவும், அதனைக் கேட்ட எம்.பி. ஹர்ஷா டி சில்வா அவர்களைக் கண்டித்ததாகவும், இந்தியாவை கிண்டலடிப்பதா? அவர்கள் மோசமான நிலையில் இருக்கும்போது அவர்களை கிண்டலடிக்கக் கூடாது. ஏனென்றால், நாம் மிக மோசமான நிலையல் இருந்தபோது கைது கொடுத்து உதவியது இந்தியாதான் என்று டி சில்வா பேசியிருக்கிறார்.
கடந்த வாரம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுக்கு 25 சதவீத வரி மற்றும் அபராதத்தை விதித்திருந்தார். அது நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, மேலும் 25 சதவீத வரியை விதித்து, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தார்.
இந்த நிலையில்தான், இலங்கையின் சமாகி ஜன பலவேகயா கட்சியின் மூத்த உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான டி சில்வா, நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்காகக் குரல் கொடுத்துள்ளார்.
இலங்கைக்கு 3.3 டன் மருத்துவ உதவியும், ஆம்புலன்ஸ் சேவையும் வழங்கியிருந்தது, உடனடி உதவிகளோடு, பல்வேறு வகையிலும் நிதியுதவி, கடனுதவி என்று உதவிக்கொண்டே இருந்தது. கடனை தள்ளுபடி செய்வது, மேற்கொண்டு கடன் வழங்குதல் என அனைத்து நிலைகளிலும் உதவியிருக்கிறது.
இந்தியாவின் நிதியுதவி என்பது குறிப்பிட்டுச் சொல்வதற்கில்லை. பெட்ரோல் முதல், பேருந்து மற்றும் பல்வேறு சேவைகளை வாரி வழங்கியது. தற்போது இந்தியாவுக்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை நிரூபிக்கும் காலம். எனவே, இந்தியாவை கிண்டலடித்துப் பேச வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.