ஈரானிய போர்க் கப்பலில் இருந்து 30 மாலுமிகளை மீட்ட இலங்கை!
இலங்கை கடற்படையால் ஈரானிய போர்க்கப்பலில் இருந்து மாலுமிகள் மீட்பு பற்றி..
ஈரானின் போர்க்கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் கடலில் மூழ்கிய ஈரானிய போர்க்கப்பலில் இருந்து 30 மாலுமிகளை இலங்கை கடற்படை மீட்டுள்ளதாக இலங்கை ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டாக இணைந்து ஈரான் மீது போர் தொடங்கியுள்ளன. ஈரானில் பல்வேறு முக்கிய இடங்களைக் குறிவைத்து அமெரிக்காவும்-இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதலுக்கு ஏவுகணைகள், போர் விமானங்கள், போர்க்கப்பல்களைப் பயன்படுத்தி வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.
இதனிடையே ஈரானின் போர்க்கப்பல்களை அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தி கடலில் மூழ்கடித்து வருகின்றது. இதுவரை ஈரானின் 17 போர்க்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், இலங்கையின் கடல் எல்லைக்கு வெளியே ஈரானின் போர்க்கப்பலான ஐரிஸ் டெனா என்ற கப்பல் மூழ்கியிருப்பது தெரியவந்தது. இந்த போர்க்கப்பல் இந்திய பெருங்கடல் வழியாக இலங்கை அருகே வந்துள்ளது.
கப்பலில் இருந்த மாலுமிகள் இலங்கையிடம் உதவி கோரிய நிலையில், இலங்கையின் கடல் எல்லைக்கு வெளியே மூழ்கிக்கொண்டிருந்த ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் டெனாவிலிருந்து 30 மாலுமிகளை இலங்கை கடற்படையினர் மீட்டதாக வெளிநாட்டு அமைச்சர் விஜேதா ஹேரத் தகவல் தெரிவித்தார்.
180 மாலுமிகளுடன் இருந்த ஈரானின் போர்க்கப்பல் மூழ்கிய நிலையில், அவர்களில் 30 மாலுமிகள் மீட்கப்பட்டு இலங்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஈரானின் போர்க்கப்பல் எப்படி இந்திய பெருங்கடலில் இலங்கை வழியாக வந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.
Advertisement