பாகிஸ்தானில், கைபர் பக்துன்குவா மாகாணத்தில் தடை செய்யப்பட்ட தலிபான் அமைப்பைச் சேர்ந்த 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைபர் பக்துன்குவா மாகாணத்தின் கைபர், டேங்க் மற்றும் லக்கி மார்வாட் ஆகிய மாவட்டங்களில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (டிச. 5) பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தச் சோதனைகளில், அப்பகுதிகளில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தாக்குதலில் தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் எனும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவம் இன்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் சில நாள்களுக்கு முன்பு பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அரசு உடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு முறித்துக் கொண்டது. அதன்பின்னர், பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மற்றும் பலூசிஸ்தான் ஆகிய மாகாணங்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அமெரிக்காவில் தீ விபத்தில் படுகாயமடைந்த இந்தியப் பெண் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.