ஆப்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 7 பேர் பலி, 150 பேர் காயம்!
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 7 பேர் பலியானதாக தகவல் தெரியவந்துள்ளது. மேலும் 150 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 7 பேர் பலியானதாக தகவல் தெரியவந்துள்ளது. மேலும் 150 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் மலைத்தொடர் அருகே பல்ஹா மாகாணத்தில் திங்கள்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.3ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 523,000 மக்கள் தொகை கொண்ட நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மசர் இ ஷெரிஃப் அருகே 28 கி.மீ ஆழத்தை மையமாகக்கொண்டு நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 7 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் தெரியவந்துள்ளது. மேலும் 150 பேர் காயமடைந்தனர் என்று மாகாண அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலநடுக்கம் மசர்-இ-ஷெரீஃப்பில் உள்ள மசூதியின் ஒரு பகுதியை அழித்ததாக பல்ஹா செய்தித் தொடர்பாளர் ஹாஜி ஜைத் தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தால் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
உயிரிழப்புகள் மற்றும் சேதம் குறித்த அறிக்கைகள் பின்னர் பகிரப்படும் என்று நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதத்தின் அளவை ராய்ட்டர்ஸால் உடனடியாக சரிபார்க்க முடியவில்லை. இதனிடையே இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் வீட்டிற்கு வெளியே உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.