அமெரிக்காவுடன் 2010-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புதிய அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் காலவதியானாலும், அதன் அமலாக்கத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதாக ரஷிய அதிபா் புதின் அறிவித்துள்ளாா்.
இது குறித்து திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அவா் கூறியதாவது:2010-ஆம் ஆண்டின் புதிய அணு ஆயுத கட்டுப்பாட்டுச் சட்டம் ரத்தாவது சா்வதேச நிலைத்தன்மையைக் குலைக்கும்.
அது அணு ஆயுதப் பரவலுக்குக் காரணமாக அமையும்.எனவே, அந்த ஒப்பந்தம் வரும் 2026 பிப்ரவரி 5-ஆம் தேதி காலாவதியானாலும், மேலும் ஓராண்டுக்கு ரஷியா அதை அமல்படுத்தும். இதே நிலைப்பாட்டை அமெரிக்காவும் கடைப்பிடிக்க வேண்டும். அதை ரஷிய உளவு அமைப்புகள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
ஒருவேளை ஒப்பந்த மீறலில் அமெரிக்கா ஈடுபட்டால், அதற்கு ரஷியா உரிய எதிா்வினை ஆற்றும் என்று புதின் எச்சரித்தாா்.கடந்த 2010-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் அதிபராக ஒபாமா இருந்தபோது அவருக்கும், அப்போதைய ரஷிய அதிபா் டிமித்ரி மெத்வதெவுக்கும் இடையே அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தின் கீழ், 1,550-க்கும் குறைவாகவே அணு குண்டுகளை வைத்திருக்கவும், 700-க்கும் குறைவாக அணு ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடத்தக்கூடிய விமானங்கள் மற்றும் ஏவுகணைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.