ரஷியா - அமெரிக்கா இடையேயான அணு ஆயுத ஒப்பந்தம் காலாவதியானது வருத்தமளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
ரஷியா - அமெரிக்கா இடையேயான அணு ஆயுத ஒப்பந்தம் காலாவதியானது குறித்து சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது, "சீனாவின் பார்வையில், நியூ ஸ்டார்ட் காலாவதியானது உண்மையிலேயே வருந்தத்தக்கது. இந்த ஒப்பந்தம் உலகளாவிய நிலைத்தன்மைக்கு இன்றியமையாதது. மேலும், ஒப்பந்தம் முடிவுற்றதால் சர்வதேச அணு ஆயுதக் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் உலக அணு ஒழுங்கின் தாக்கம் குறித்து பரவலான கவலை உள்ளது.
அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டும் என்று ரஷியா கோரியுள்ளது. ரஷியாவின் முன்மொழிவுக்கு அமெரிக்கா பதிலளிக்கும் என்றும், காலாவதியான ஒப்பந்தத்துக்கு ஒரு நல்ல முடிவைத் தரும் என்றும் சீனா நம்புகிறது. இதைத் தான் உலகமும் விரும்புகிறது" என்று குறிப்பிட்டுள்ளனர்.
ரஷியா - அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் அல்லது குறைக்கும் நோக்கில், 2010 ஆம் ஆண்டில் நியூ ஸ்டார்ட் என்ற ஒப்பந்தம் செய்துகொண்டன. இதன்படி, இரு நாடுகளும் தலா 1,550 அணு ஆயுதங்களை மட்டுமே வைத்துக்கொள்ள முடியும். இந்த நிலையில், இந்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவடைந்தது.
ஒப்பந்தத்தை நீட்டிக்க ரஷியா முன்மொழிந்தாலும், அமெரிக்கா பதிலேதும் தெரிவிக்கவில்லை.
சீனா அணு ஆயுத வளா்ச்சியில் கவனம் செலுத்தி வருவதால், அமெரிக்காவும் தனது ஆயுதக் கிடங்கை அதிகரிக்க முயல்வதாகக் கூறப்படும் நிலையில், ரஷியா - அமெரிக்கா ஒப்பந்தத்தை மீண்டும் கொண்டுவர விரும்புவதாக சீனா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.