ஈரான் வரி குறைப்பு குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்
ஈரானுடன் 2 வாரங்களுக்கான போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு வரி குறைப்பு குறித்து டிரம்ப் கருத்து...
ஈரானுக்கு வரி மற்றும் பொருளாதாரத் தடைகளை தளர்த்துவது குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாகவும், இனியும் நடத்த முயற்சிகள் எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (ஏப். 8) தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என நேற்று இரவு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். இதனிடையே இன்று அதிகாலை ஈரானுடன் இரண்டு வாரங்களுக்கான போர் நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில், ஈரானில் உள்ள யுரேனியம் தோண்டி எடுக்க அப்பகுதிகளை கண்காணித்து வருவதாகவும், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
இது தொடர்பாக தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
''மிகவும் பயனுள்ள ஒரு ஆட்சி மாற்றத்தைக் கடந்துவிட்ட ஈரானுடன், அமெரிக்கா நெருக்கமாக இணைந்து செயல்படும்!
யுரேனியம் செறிவூட்டல் எதுவும் இருக்காது. ஈரானுடன் இணைந்து, ஆழமாகப் புதைக்கப்பட்ட (பி-2 குண்டுவீச்சு விமானங்கள்) அணு ஆயுதங்களைத் தேடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
அது தற்போது மிகவும் கடுமையான செயற்கைக்கோள் கண்காணிப்பின் கீழ் உள்ளது. ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நாளிலிருந்து எதுவும் தொடப்படவில்லை. நாங்கள் ஈரானுடன் சுங்கவரி மற்றும் பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவது குறித்துப் பேசி வருகிறோம், இனியும் பேசுவோம்.
ஈரான் உடனான 15 அம்ச கோரிக்கைகளில் பலவற்றுக்கு ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி'' என டிரம்ப் பதிவிட்டுள்ளார்.