வங்கதேசத்தில் தட்டம்மைக்கு மேலும் 12 குழந்தைகள் பலி! உயிர்ப் பலி 451 ஆக அதிகரிப்பு!
வங்கதேசத்தில் தட்டம்மைக்கு மேலும் 12 குழந்தைகள் பலியானது குறித்து...
வங்கதேச நாட்டில் தட்டம்மை பாதிப்புகளால் மேலும் 12 குழந்தைகள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில், கடந்த சில வாரங்களாகத் தட்டம்மைப் பரவல் அதிகரித்து வருகின்றது. இதனால், அந்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தட்டம்மை பாதிப்புகளால் மேலும் 12 குழந்தைகள் பலியானதாக, கடந்த வெள்ளிக்கிழமை (மே 15) அன்று அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
Advertisement
இதன்மூலம், வங்கதேசத்தில் தட்டம்மைப் பரவலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 451 ஆக அதிகரித்துள்ளது. இதில், தற்போது பலியான குழந்தைகளில் 4 பேர் தட்டம்மை பாதிப்புகளாலும், 8 பேர் தட்டம்மை சார்ந்த அறிகுறிகளாலும் பலியாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 111 பேருக்குத் தட்டம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும், 1,192 பேர் தட்டம்மைக்கான அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வந்ததாகவும், அவர்களில் 1,016 அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வங்கதேசத்தில் சுகாதாரம் பாதிக்கப்பட்டதற்கும், தட்டம்மை பரவலுக்கும், இடைக்கால ஆலோசகராகப் பதவி வகித்த முஹமது யூனுஸ் மற்றும் அவரின் சுகாதார ஆலோசகர் நூர்ஜஹான் பேகம் ஆகியோர்தான் காரணம் எனக் குற்றம்சாட்டி ஏராளமான ஆர்வலர்கள் கடந்த மே 13 அன்று போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.