ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி அமலாக்கத்துறை முன் ஆஜரானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணைக்கு சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி இன்று (நவம். 9) காலை 11 மணிக்கு ஆஜரானார்.
அவரின் வருகையைத் தொடர்ந்து சால்ட் லேக் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வெளியே விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆனால் அன்றைய தினத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் மேற்குவங்க மாநிலத்துக்கு முறையாக நிதி ஒதுக்காததைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக தில்லியில் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் அபிஷேக் பானர்ஜி தலைமையில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த அக்டோபர் 3-ஆம் தேதி அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
அதேபோல, ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 13-ஆம் தேதியும் அவருக்கு அழைப்பாணை அனுப்பி, சுமார் ஒன்பது மணி நேரம் விசாரணை நடத்தியது.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டே குறிப்பிட்ட சில தினங்களில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்புவதாக அக்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
2014 முதல் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.பி.யாக இருந்துவரும் அபிஷேக் பானர்ஜி இதற்கு முன்பு நிலக்கரி கொள்ளை வழக்கில் 2021-ஆம் ஆண்டில் தில்லியில் ஒரு முறையும், 2022-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் இரண்டு முறையும் அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.