புனித கங்கையில் முழுகும் போதும் பாலியல் வன்முறையா? இந்த தேசம் எங்கே சென்று கொண்டிருக்கிறது?!

திங்களன்று நடந்த இக்குற்றச் செயல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு விஷயம் ரூரல் எஸ் பி அனந்த்குமார் வரை சென்று பொது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய பின்னரே காவல்துறை இச்சம்பவத்தில் அலர்ட் அடைந்து
புனித கங்கையில் முழுகும் போதும் பாலியல் வன்முறையா? இந்த தேசம் எங்கே சென்று கொண்டிருக்கிறது?!

கடந்த திங்களன்று பிகார் மாநிலம் பாட்னாவில் கங்கை நதியில் மதச் சடங்குகளுக்காக 45 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் புனிதக் முழுக்குச் செய்ய இறங்கியிருக்கிறார். அப்போது இரு ஆண்கள் அவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதோடு அதில் ஒரு நபர் அதை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களிலும் பகிர்ந்த செய்தி அப்பகுதி  மக்களையும், மகளிர் அமைப்புகளையும் கொதித்தெழச் செய்துள்ளது. 

சம்பவம் நடந்த மறுகணமே பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த அவலத்தை கிராம மக்களிடம் தெரிவித்து அவர்களின் துணையோடு குற்றவாளிகளுக்கு எதிராகக் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். ஆனால் முதலில் பாட்னா காவல்துறையினர் பெண்ணின் புகாரை ஏற்று முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

திங்களன்று நடந்த இக்குற்றச் செயல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு விஷயம் ரூரல் எஸ் பி அனந்த்குமார் வரை சென்று பொது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய பின்னரே காவல்துறை இச்சம்பவத்தில் அலர்ட் அடைந்து சம்பவத்தை வழக்காகப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முனைந்துள்ளது.

காவல்துறை விசாரணையில் தெரியவந்த செய்தி, பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய நபரின் பெயர் ஷிவ்புஜன் மஹ்தோ என்றும் என்பதும் ஓட்டுநராகப் பணியாற்றி வரும் அந்த நபர் கங்கையில் முழுகச் சென்ற பெண்ணை தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து  வன்முறையைப் பிரயோகித்து இழுத்துச் சென்று கங்கை நதிக்கரையில் வைத்து பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய விவரம் தெரிய வந்தது.

மதச் சடங்குகளை நிறைவேற்ற கங்கையில் இறங்கிய தன்னை பாலியல் நோக்கில் அணுகிய ஆண்களிடம் அப்பெண், தன்னை விட்டு விடுமாறு கதறி இருக்கிறார். புனித நதியான கங்கையை கருத்தில் கொண்டு அதன் புனிதத்தைக் குலைக்காமல் இருப்பதற்காகவாவது தன்னை விட்டு விடுமாறும், கங்கை என்பவள் வெறும் நதியல்ல அவள் நமது தாயைப் போன்றவள். அவள் முன்னிலையில் இப்படி பாலியல் வன்முறை செய்வது எந்த விதத்தில் நியாயம்’ என்று கேட்டும் அப்பெண் போராடி இருக்கிறார். ஆயினும் பெண் பித்தர்களான அவ்விரு ஆண்களும் கங்கையின் புனிதத்தைப் பற்றியோ, ஒரு பெண்ணின் கதறலைப் பற்றியோ கிஞ்சித்தும் கவலைப்படாமல் தங்களது வக்கிரப் பசியைத் தீர்த்துக் கொண்டதோடு அதை வீடியோவாக்கி சமூக ஊடகங்களிலும் பகிர்ந்து தற்போது காவல்துறையில் மாட்டி கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். 
இச்சம்பவத்தில் மேலும் கொடுமை என்னவென்றால், ஒரு நடுத்தர வயதுப் பெண்ணை ஆண்கள் சிலர் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்யும் வீரப் பிரதாபத்தைக் காண குற்றவாளிகள் இருவருள் ஒருவனான மஹ்தோ அறியாச் சிறுமி ஒருத்தியையும் உடனழைத்துச் சென்றிருந்த விஷயம் காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. தற்போது அச்சிறுமியும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டு விட்டதாக பாட்னா எஸ் பி மனு மகராஜ் தெரிவித்திருக்கிறார்.

இனிமேல் இப்படிப்பட்டவர்களை அடக்கி ஒடுக்க வேண்டுமெனில் அதற்கு ஒரே தீர்வு மரண தண்டனையாகத்தான் இருக்க முடியும் என்ற நிலையை இப்படி சீர்கெட்ட சிலரே உருவாக்கிக் கொண்டிருக்கும் அவலத்தை என்ன சொல்ல?!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com