இதென்னடா இது? புரட்டாசி மாசத்தில் மீன் வாங்குவதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்களே? என்று சைவப் பட்சிணிகள் ஆட்சேபிக்கலாம். ஆனால், நேற்று ஃபேஸ்புக்கில் சினேகிதி ஒருவர் மதிய உணவுக்கு மத்தி மீன் குழம்பு வைத்து வஞ்சிரத்தைப் பொரித்து, இறாலை வறுத்து, சுறாவைப் புட்டு செய்து, நண்டு மசாலா செய்து சாப்பிட்டதாக பதிவிட்டிருந்தாரா? அதைக் கண்டதும் புரட்டாசியில் அசைவம் சாப்பிடக் கூடியவர்கள் இருக்கிறார்களே, அவர்களுக்கு இந்தத் தகவல் உதவுமே என்ற ஒரு பொதுவான நோக்கில் இந்த காணொளியைப் பகிர்கிறோம். புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்க்கப்பட வேண்டியதின் அவசியம் குறித்து பலர் ஒப்புக் கொண்டாலும் எல்லா மாதங்களிலும் அசைவம் குறிப்பாக கடல் உணவுகளைப் பேருவகையுடன் உண்ணும் பிரிவினர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு மார்கழி கிடையாது, சித்திரை கிடையாது, புரட்டாசி கிடையாது, ஏன் நாள், கிழமை கூட கிடையாது. அதைப் பற்றியெல்லாம் அவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அதுசரி நாணயத்திற்கு இருபக்கம் என்பதைப்போல ஒரு சாரர் அப்படி இருந்தால் பிறிதொரு சாரர் இப்படியும் இருக்கத்தான் செய்வார்கள். அது தானே சமநிலை.