திருக்குவளை அருகே இருவேறு சம்பவங்களில் வீடு இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
நாகை மாவட்டம், திருக்குவளையை அடுத்த ஆதமங்கலம் ஊராட்சி, தென்மருதூர் கிராமம் கன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பக்கிரிசாமி மற்றும் அவரது மனைவி அன்னப்பட்டு ஆகியோர் இவர்களது மூன்றாவது மகனான மணிகண்டன் வீட்டில் வசித்து வருகின்றனர். பாரதப் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மணிகண்டனுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பயன்பாட்டிலிருந்த இவர்களது காலனி வீட்டினை இடித்துவிட்டு புதிய வீடு கட்டுவதற்கான பணியை துவங்க முதற்கட்டமாக நேற்று வீட்டின் மேற்பரப்பு பகுதி பாதி இடிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க- இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது: வைகோ கண்டனம்
இந்நிலையில், இன்று காலை அன்னப்பட்டு தான் வளர்த்து வந்த ஆடுகளை மேய்ச்சலுக்காக வயலுக்கு அனுப்பிவிட்டு பாதி இடிக்கப்பட்ட நிலையில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக வீட்டின் முகப்பு பகுதியிலுள்ள சிமெண்ட் காரை (சிலாப்) பெயர்ந்து அவர் மீது விழுந்துள்ளது. தகவறிந்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து அவரை மீட்டனர். எனினும், உடல் நசுங்கி படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வலிவலம் போலீசார் மற்றும் ஆதமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவரது உடல் உடற்கூராய்வுக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருக்குவளை அடுத்துள்ள பையூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரது வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்ததில் அவரது மனைவி மலர்கொடி(62) சம்பவ இடத்திலேயே பலியானார். நாகை அருகே இருவேறு பகுதிகளில் காலனி மற்றும் மண்சுவர் வீடு இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.