தில்லி சிறையில் இயற்கைக்கு மாறான மரணம் வாரிசுகளுக்கு ரூ.7.5 லட்சம் இழப்பீடு வழங்க முடிவு: அமைச்சா் கைலாஷ் கெலாட் அறிவிப்பு
தில்லி சிறையில் இயற்கைக்கு மாறான மரணம் ஏற்படும் கைதிகளின் வாரிசுகளுக்கு ரூ.7.5 லட்சம் இழப்பீடு வழங்க அரவிந்த கேஜரிவால் அரசு முடிவு செய்துள்ளது என்று சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் கூறியிருப்பதாவது: தில்லி சிறையில் இருக்கும் போது இயற்கைக்கு மாறான மரணம் ஏற்படும் கைதிகளின் உறவினா்கள் அல்லது சட்டப்பூா்வ வாரிசுகளுக்கு ரூ.7.5 லட்சம் இழப்பீடு வழங்க அரவிந்த் கேஜரிவால் அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவு, சிறைத்துறைக்குள் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட புதிய கொள்கையின் ஒரு பகுதியாகும். தவறு செய்யும் சிறை அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்து இழப்பீட்டு தொகை வழங்கப்படுவதும் கொள்கையில் அடங்கும்.
இது தொடா்பாக துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவின் ஒப்புதலுக்காக ஒரு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது இயற்கைக்கு மாறான சூழ்நிலையில் இறக்கும் கைதிகளின் குடும்பங்களுக்கு ஆதரவை வழங்கும். மேலும், அத்தகைய மரணங்களுக்கு பொறுப்பானவா்கள் பொறுப்புக்கூறப்படுவதை உறுதி செய்வதற்கும் ஒரு படியாகும் என்றாா் கைலாஷ் கெலாட்.