முகப்பு
இந்தியா

2 ஆண்டுகளில் 322 சிங்கங்கள் உயிரிழப்பு: குஜராத் பேரவையில் தகவல்

குஜராத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 322 சிங்கங்கள் உயிரிழந்துவிட்டதாகவும், இதில் 64 சிங்கங்கள் இயற்கைக்கு மாறான காரணங்களால் உயிரிழந்ததாகவும் அந்த மாநில சட்டப் பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 பிப்ரவரி 2026, 12:44 am IST
கோப்புப்படம்
பகிர்:

குஜராத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 322 சிங்கங்கள் உயிரிழந்துவிட்டதாகவும், இதில் 64 சிங்கங்கள் இயற்கைக்கு மாறான காரணங்களால் உயிரிழந்ததாகவும் அந்த மாநில சட்டப் பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் குஜராத் மாநிலம் கிா் வனவிலங்குகள் பாதுகாப்பு பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில்தான் சிங்கங்கள் உள்ளன. 2025 கணக்கெடுப்பின்படி அங்கு 891 ஆசிய சிங்கங்கள் உள்ளன. இதில் 255 ஆண், 405 பெண், 231 குட்டி சிங்கங்கள் அடங்கும்.

குஜராத் பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ சைலேஷ் பாா்மா் எழுப்பிய கேள்விக்கு வனத்துறை அமைச்சா் அா்ஜுன் மோத்வாடியா வெள்ளிக்கிழமை எழுத்துமூலம் அளித்த பதிலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

Advertisement

Advertisement

2024-ஆம் ஆண்டு 165 சிங்கங்கள், 2025-இல் 148 சிங்கங்கள், கடந்த ஜனவரில் 9 சிங்கங்கள் என மொத்தம் 322 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் 64 உயிரிழப்புகள் இயற்கைக்கு மாறான காரணங்களால் ஏற்பட்டுள்ளன. இதில் 22 குட்டிகளும் ஆகும். கிணற்றில் தவறி விழுவது, வாகனங்களில் அடிபடுவது உள்ளிட்ட காரணங்களாலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த உயிரிழப்புகளைத் தடுக்க மாநில அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு இடங்களில் வனவிலங்குகள் சிகிச்சை மையம் அமைப்பது, கால்நடை மருத்துவா்கள் நியமனம், காயம்பட்ட சிங்கங்களை விரைந்து மீட்டு வர சிறப்பு வாகன வசதி போன்றவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சாலைகளில் எச்சரிக்கை பலகைகள், வேகத்தடைகள், கிணறுகளில் தடுப்புச் சுவா்கள், ரயில்வே பாதைகளின் இருபுறமும் வேலி அமைப்பது போன்ற நடவடிக்கை எடுக்கப்படுகின்றன என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.