திருச்சி: திமுக ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கென்ற பிரத்யேக கட்டணமில்லா தொலைபேசி சேவை தொடங்கலாம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருச்சியில் புதன்கிழமை பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது:
கடந்த 8 ஆண்டு காலத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. கடந்த 2014 முதல் வீடற்ற ஏழைகளுக்கு 52 லட்சம் வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது. 2024-க்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு விடும்.
கடந்த 2014ஆம் ஆண்டு சூரிய மின் உற்பத்தி 2 ஜிகாவாட் ஆக இருந்த நிலையில் தற்போது 53 ஜிகவாட் ஆக உயர்ந்துள்ளது. கரோனா காலகட்டத்தில் அதிக வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா உள்ளது. ஆதார்-ரேஷன் கார்டு இணைப்பால் 4 கோடி போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டுள்ளது.
2018-ல் 2022 வரை 7 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. 2014-க்கு பிறகு தமிழகத்தில் 228 சிலைகள் வெளிநாட்டில் இருந்து மீட்டு வரப்பட்டுள்ளது.
மேகதாது, முல்லைப் பெரியாறு விவகாரத்தில் காங்கிரஸ், திமுக இரட்டை வேடம் போடுகிறது. தமிழகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிப்படைந்துள்ளது. தமிழக காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு உள்ளது.
இதுவரை காணாத ஊழலை, இனி வரும், 2 ஆண்டுகளில் தமிழகம் காணப் போகிறது. திமுக ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கென்றே தனி டோல்பிரீ நம்பரை ஆரம்பிக்க யோசித்து வருகிறோம்.
பாஜக வெளியிடும் ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்து திமுக தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும். இந்த ஆட்சியை கவிழ்ப்பது பாஜகவின் நோக்கமல்ல என்றார் அண்ணாமலை.
இதையும் படிக்க: யூடியூபர் கார்த்திக் கோபிநாத் ஜாமின் மனு தள்ளுபடி