ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற சார்பு-நீதிபதி உத்தரவு
பண்ருட்டி, செட்டிப்பட்டறை ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு சார்பு-நீதிபதி ரேவதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பண்ருட்டி, செட்டிப்பட்டறை ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு சார்பு-நீதிபதி ரேவதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பண்ருட்டி செட்டிப்பட்டறை ஏரியில் உள்ள சீமைக் கருவேல மரங்களை பொதுப்பணித் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் திங்கள்கிழமை அகற்றினர். இந்தப் பணியை பண்ருட்டி சார்பு-நீதிபதி ரேவதி தொடக்கி வைத்தார்.
அப்போது, சுமார் 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட செட்டிப்பட்டறை ஏரியானது தற்போது 25 ஏக்கராகச் சுருங்கியதும், ஏரியின் ஏனைய பகுதிகள் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து சார்பு-நீதிபதி ரேவதி கூறுகையில், சீமைக் கருவேல மரங்களை வேரோடு அகற்ற வேண்டும். அதேநேரத்தில் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கும்படி வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கமலக்கண்ணன், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் சரவணபாபு, கணேசன், வட்டாட்சியர் விஜய்ஆனந்த், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் எஸ்.குமார் ஆகியோர் உடனிருந்தனர்.