பெண்ணை பாஜக தலைவரின் மகன் பின்தொடர்ந்த சம்பவம்: சிபிஐ விசாரணை கோர சுப்பிரமணியன் சுவாமி முடிவு
சண்டீகரில் ஐஏஎஸ் அதிகாரியின் மகளை ஹரியாணா மாநில பாஜக தலைவரின் மகன் பின்தொடர்ந்த சம்பவத்தில், சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தில் பொதுநல
சண்டீகரில் ஐஏஎஸ் அதிகாரியின் மகளை ஹரியாணா மாநில பாஜக தலைவரின் மகன் பின்தொடர்ந்த சம்பவத்தில், சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்ய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவுகளில், "இந்த விவகாரத்தில், சண்டீகர் போலீஸார் தங்களது முந்தைய நிலையில் இருந்து திடீரென மாறிவிட்டனர். எனவே, இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின்கீழ், சிபிஐ விசாரணை கோரி, பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளேன்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தனது மகள் பின்தொடரப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர்கள் அனைவருக்கும் கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று ஐஏஎஸ் அதிகாரி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக முகநூலில் அவர் வெளியிட்ட பதிவில், "இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் நடத்தும் விசாரணையில் நாங்கள் குறுக்கிட மாட்டோம். அதேநேரத்தில், குற்றச்சாட்டுகளை வலுவிழக்கச் செய்யும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டது தெரிந்தால், நீதிமன்றத்தில் அதை நாங்கள் எதிர்ப்போம்' எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணையத் தலைவர் லலிதா குமாரமங்கலம், ஹரியாணா பாஜக தலைவர் மகனுக்கு எதிராக பெண் அளித்த புகார் மீது நேர்மையான மற்றும் சுதந்திரமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நிலவரத்தை உடனுக்குடன் தனக்கு தெரிவிக்க வேண்டும் என்று காவல்துறையினரை கேட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பின்னணி: ஹரியாணா மாநில பாஜக தலைவர் சுபாஷ் பரலாவின் மகன் விகாஷ் (23), அவரது நண்பர் ஆஷிஸ் குமார் (27) ஆகியோர் மீது ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் மகள் புகார் அளித்தார். அதில், சண்டீகரில் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு விகாஷும், குமாரும் தன்னை துரத்தி வந்ததாக குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து, 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். எனினும், அவர்கள் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
ஹரியாணா மாநில பாஜக தலைவரின் மகனுக்கு எதிராக ஐஏஎஸ் அதிகாரியின் மகள் அளித்த புகாரின்மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை மூடி மறைக்க மத்திய அரசும், பாஜகவும் முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து தில்லியில் அக்கட்சியின் ஊடகத் தொடர்பு பிரிவு தலைவர் ரனதீப் சுர்ஜேவாலா கூறுகையில்: "சண்டீகர் காவல்துறை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது; எனவே, ஹரியாணா பாஜக தலைவரையும், அவரது மகனையும் காப்பாற்ற அவர்கள் (மத்திய அரசு, பாஜக) முயற்சிக்கின்றனர். இந்த விவகாரத்தில், ஹரியாணா பாஜக தலைவரும், அவரது மகனும் ஏன் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் பதிலளிக்க வேண்டும்' என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி மீது விமர்சனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறுகையில், "சகோதரிகளிடம் இருந்து பிரதமர் ராக்கி கயிறுகளை பெறுகிறார்; ஆனால், ஹரியாணா மண்ணின் மகள் விவகாரம் தொடர்பாக ஒருவார்த்தை கூட அவர் பேசவில்லை' என்றார்.