முகப்பு
இந்தியா

மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க மத்திய அரசு புதிய திட்டம்

மாணவர்களின் புத்தக சுமையைக் குறைக்கும் நோக்கில் பள்ளிகளை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:24 PM
பகிர்:

மாணவர்களின் புத்தக சுமையைக் குறைக்கும் நோக்கில் பள்ளிகளை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாவத் பகுதியில் நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 20 பள்ளிகளின் தொடக்க நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது:
ஒன்றாம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை கற்பிப்பதற்காக நாடு முழுவதும் மொத்தம் 15 லட்சம் பள்ளிகள் உள்ளன. இதில், 26 கோடி மாணவர்களுக்கு 70 லட்சம் ஆசிரியர்கள் பாடங்களைக் கற்பித்து வருகின்றனர். 10 கோடி மாணவர்கள் மதிய உணவுத் திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர்.
கற்பிக்கும் முறையை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் மாணவர்களின் புத்தக சுமையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளிகளில் டிஜிட்டல் பலகைகள், புரொஜக்டர், புதிய மென்பொருள் ஆகியவற்றின் மூலம் பள்ளிகளை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் அடுத்த கல்வியாண்டு முதல் மாணவர்களின் புத்தக சுமை குறையும்.
இங்கு புதிதாகத் திறக்கப்பட்டுள்ள 20 பள்ளிகளில் எல்சிடி போர்டு, புரொஜக்டர்கள் மூலம் விரைவில் பாடம் நடத்தப்படும். இதற்காக ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்றார் அவர்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், பாஜக தலைவர்கள், எம்.பி.க்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →