ஹஜ் பயணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்குத் தடை: மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கு!
ஹஜ் பயணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்குத் தடை என்ற மத்திய அரசின் புதிய உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்,மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப தில்லி உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
புதுதில்லி: ஹஜ் பயணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்குத் தடை என்ற மத்திய அரசின் புதிய உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்,மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப தில்லி உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து ஆண்டு தோறும் கணிசமான இஸ்லாமிய மக்கள் தங்கள் மதக் கடமையினை நிறைவேற்ற ஹஜ் புனிதப் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோருக்கான 'தகுதி' தொடர்பான வழிகாட்டுதல்களில், உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் மனநலம் குன்றியவர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியாது என்று மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது.
மத்திய அரசின் இந்த உத்தரவினை எதிர்த்து கவுரவ் பன்சால் என்ற வழக்கறிஞர் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவர் தனது மனுவில் மத்திய அரசின் இந்த உத்தரவானது அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 14, 21 மற்றும் 25 வழங்கியுள்ள மத சமத்துவம் தொடர்பான உரிமைகளுக்கு எதிராக அமைத்திருப்பதாகத் தெரிவித்திருந்தார்
Advertisement
இந்நிலையில் இந்த வழக்கானது இன்று உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கீதா மிட்டல் மற்றும் நீதிபதி ஹரி சங்கர் அடங்கிய அமர்வின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதுதொடர்பாக உரிய விளக்கமளிக்குமாறு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை,மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாடு & ஹஜ் துறை அமைச்சகங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப தெரிவித்த நீதிமன்றம், வழக்கினை ஏப்ரல் 11-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து அன்றே பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.