ஐ.நா. பேச்சா அல்லது பாரதிய ஜனதாவின் கோஷமா?: சுஷ்மாவுக்கு சசி தரூர் சரமாரி கேள்வி
ஐக்கிய நாடுகள் சபை பேச்சா அல்லது பாரதிய ஜனதாவின் கோஷமா? என்று சுஷ்மா ஸ்வராஜின் ஐ.நா உரையை முன்வைத்து காங்கிரசின் சசி தரூர் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.
புது தில்லி: ஐக்கிய நாடுகள் சபை பேச்சா அல்லது பாரதிய ஜனதாவின் கோஷமா? என்று சுஷ்மா ஸ்வராஜின் ஐ.நா உரையை முன்வைத்து காங்கிரசின் சசி தரூர் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உரையாற்றினார். அவரது இந்தப் பேச்சினை காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
சுஷ்மா ஸ்வராஜின் ஐ.நா. சபை பேச்சு ஒரு கட்சிப் பிரசாரத்திற்கான பேச்சு போன்று உள்ளது, இப்படிப் பேசிவிட்டு யாரும் தேசியக் கொடிக்கு பின்னார் ஒளிந்து கொள்ள முடியாது, அதேசமயம் ஐ.நா. சபையை அரசியலுக்கான தளமாக பயன்படுத்த முடியாது.
சுஷ்மா ஸ்வராஜ் தனது உரையில் பிரதமர் மோடியின் பெயரை 10 முறை குறிப்பிடுகிறார், ஆனால் இந்தியாவைப் பற்றி 5 முறை மட்டுமே குறிப்பிடுகிறார்.
சுஷ்மாவின் பேச்சின் முதல் பாதி முழுவதுமே பிரதமர் மோடியின் புதிய இந்தியாவிற்கான திட்டங்களைப் பற்றி மட்டுமே பார்வையை முன்வைத்தார். அதுவும் தூய்மை பாரதம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்துதான் பேசியுள்ளார். இது ஐக்கிய நாடுகள் சபை பேச்சா அல்லது பாரதிய ஜனதாவின் கோஷமா?
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.