லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவங்களுக்கு இடையே நடந்த மோதலில் இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரி உள்பட 3 பேர் உயிரிழந்ததாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே, சீனத் தரப்பில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.
இந்திய - சீன எல்லைப் பகுதியான லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் குவிக்கப்பட்டிருந்த இரு நாட்டு ராணுவ வீரர்களும் விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையின் போது மோதல் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்கலாம்.. லடாக் விவகாரத்தில் இந்தியா தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம்- சீனா
சீன ராணுவத்துடனான மோதலின் போது துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டதாகவும், இந்த தாக்குதலில் இந்திய ராணுவ உயர் அதிகாரி மற்றும் இரண்டு ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். உடனடியாக ராணுவ உயர் அதிகாரிகள் தலையிட்டு, பேச்சுவார்த்தை நடத்தி நிலையை சுமூகமாக்கியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
லடாக் எல்லைப் பகுதியில் படைகளை திரும்பப் பெறுவது தொடா்பாக இந்தியா - சீனா இடையே ராணுவ நிலையிலான பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெற்று வந்தது. படைப் பிரிவின் தளபதிகள் நிலையிலான இந்த பேச்சுவாா்த்தை கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில், இந்த மோதல் காரணமாக பதற்றம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
லடாக் எல்லையில் கடந்த பல வாரங்களாக இந்தியா-சீனா இடையே பதற்றம் நீடித்து வந்த நிலையில், பேச்சுவாா்த்தையை அடுத்து இரு நாட்டு ராணுவங்களும் தனது படைகளை திரும்பப் பெறத் தொடங்கின.
இதையும் படிக்கலாம்.. சீன மோதலில் தமிழக வீரர் திருவாடானை பழனி வீரமரணம்
தற்போது எல்லையில் அமைதியான சூழலை மேம்படுத்துவதற்காக இரு நாட்டு ராணுவத்தின் படைப் பிரிவு தளபதிகள் அளவிலான பேச்சுவாா்த்தை கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதன் பேரில் மேலும் பல இடங்களில் இருந்தும் இரு நாட்டு ராணுவங்களும் குறிப்பிட்ட அளவிலான படைகளை திரும்பப் பெற்று வருவதாகக் கூறப்பட்டது.
கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற ராணுவ துணைத் தளபதிகள் அளவிலான பேச்சுவாா்த்தைக்குப் பிறகு எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கக் கூடிய வகையிலான எந்தவொரு நடவடிக்கையிலும் இந்திய, சீன ராணுவங்கள் ஈடுபடவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு இரு ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ராணுவ தரப்பில் உயிர் இழப்புகளும் நேரிட்டுள்ளன.
இந்திய - சீன ராணுவங்கள் விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையின் போது இந்த மோதல் நடைபெற்றதாக முதற்கட்ட தகவலை இந்திய ராணுவம் தெரிவித்துள்ள நிலையில், மேலதிகச் செய்திகள் எதிர்பார்க்கப்படுகின்றன.