முகப்பு
இந்தியா

கேரளத்தில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான்

கேரளத்தில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 18 டிசம்பர், 2021 at 8:29 PM
கோப்புப்படம்
பகிர்:


கேரளத்தில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

"திருவனந்தபுரத்தில் இரண்டு பேருக்கும், மலப்புரம் மற்றும் திரிச்சூரில் தலா ஒருவருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனிலிருந்து திருவனந்தபுரம் திரும்பிய 17 வயதுடைய நபர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். திருவனந்தபுரத்தில் பாதிக்கப்பட்ட மற்றொருவர் தனி விமானம் மூலம் துனிசியாவிலிருந்து வந்திருக்கிறார். அவருக்கு வயது 44.

Advertisement

மலப்புரத்தில் பாதிக்கப்பட்டவர் (37) தன்சானியாவிலிருந்து வந்திருக்கிறார். திரிச்சூரைச் சேர்ந்தவர் (49) கென்யாவிலிருந்து திரும்பியுள்ளார்.

கென்யா மற்றும் துனிசியா அபாய நாடுகள் பட்டியலில் இல்லாதபோதிலும், தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

பிரிட்டனிலிருந்து திரும்பிய 17 வயதுடையவர் டிசம்பர் 9-ம் தேதி தாய், தந்தை மற்றும் சகோதரியுடன் கேரளம் வந்தடைந்தார். அவரது பாட்டியும் அவருடன் தொடர்பிலிருந்திருக்கிறார். அவர்கள் அனைவரும் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

மலப்புரத்தில் ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர். டிசம்பர் 13-ம் தேதி கேரளம் வந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்."

கேரளத்தில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு கடந்த 12-ம் தேதி கண்டறியப்பட்டது. அவர் பிரிட்டனிலிருந்து எர்ணாகுளம் திரும்பினார். டிசம்பர் 15-ம் தேதி 4 பேருக்கும், வெள்ளிக்கிழமை 2 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதன்மூலம், கேரளத்தின் மொத்த ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.