கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், உத்தரகண்ட் மாநிலத்தில் அமலில் இருக்கும் பொது முடக்கம் ஜூன் 15 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
தற்போது மாநிலத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் பொதுமுடக்கம் செவ்வாய்க்கிழமை காலை வரை அமலில் இருக்கும் நிலையில், அது இன்று நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மாநில தலைமைச் செயலாளர் ஓம் பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.
அதில், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. கரோனா இல்லை என்ற சான்று வைத்திருக்கும் 20 பேர் திருமணங்களில் பங்கேற்கவும், இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மளிகைக் கடைகளை வாரத்தில் இரண்டு நாட்கள் அதாவது ஜூன் 9 மற்றும் ஜூன் 14 ஆம் தேதிகளில் திறக்கலாம் என்றும் அன்றைய தினங்களில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே கடைகளை திறக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.