முகப்பு
இந்தியா

யார் ராணுவத்தை அவமதிப்பது? பிரதமர் மோடிக்கு காங்கிரஸின் 7 கேள்விகள்

சீனப் படைகள் ஊடுருவல் குறித்து ராகுல்காந்தி தெரிவித்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் 7 கேள்விகளை முன்வைத்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:07 AM
பகிர்:

சீனப் படைகள் ஊடுருவல் குறித்து ராகுல்காந்தி தெரிவித்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் 7 கேள்விகளை முன்வைத்துள்ளது. 

கடந்த சில தினங்களாக இந்திய எல்லைப் பகுதியான தவாங்கில் சீனப் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வந்தன. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் கோரிய நிலையில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி சீனா போருக்கு தயாராகி வரும் நிலையில் மத்திய அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது என விமர்சனம் தெரிவித்தார். இதற்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததுடன் ராகுல்காந்தி ராணுவத்தை அவமதிப்பதாக குற்றம்சாட்டினர். 

இந்நிலையில் இந்திய சீன விவகாரங்கள் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் 7 கேள்விகளை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 

1. ஜூன் 20, 2020 அன்று, கிழக்கு லடாக்கில் இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவவில்லை என்று ஏன் சொன்னீர்கள்?

2. மே, 2020க்கு முன்பு வழக்கமாக ரோந்து செல்லும் கிழக்கு லடாக்கின் ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் பகுதியில் நமது படைகள் நுழைவதைத் தடுக்க சீனப் படைகளை எதற்கு அனுமதித்தீர்கள்?

3. 17 ஜூலை 2013 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய ராணுவ வீரர்கள் மலையை முற்றுகையிடும் திட்டத்தை ஏன் ரத்து செய்தீர்கள்?

4. பிஎம் கேர்ஸ் நிதிக்கு சீனாவிடம் இருந்து ஏன் நன்கொடை பெற்றீர்கள்?

5. கடந்த இரண்டு ஆண்டுகளாக சீனப் பொருள்கள் இறக்குமதியை ஏன் அதிகரித்தீர்கள்? 

6. எல்லை பாதுகாப்பு குறித்தும், சீனாவிடம் இருந்து நாம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த ஏன் மறுக்கிறீர்கள்? 

7. நீங்கள் இதுவரை 18 முறை சீன அதிபரை சந்தித்துள்ளீர்கள். சமீபத்தில் கூட அவருடன் பாலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கைகுலுக்கினீர்கள்.அதன்பிறகு சிறிது நேரத்தில் தவாங் பகுதியில் ஊடுருவிய சீனா, எல்லைப் பகுதியை மாற்றியமைக்க முனைந்தது. ஏன் நாட்டை உறுதியான நிலைக்கு இட்டுச் செல்லவில்லை?  என கேள்வி எழுப்பியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →