ஹிஜாப் பள்ளியின் சீருடை அல்ல, அதனால் ஹிஜாப் அணிந்து வருவதைத் தடை செய்ய வேண்டும் என்று மத்தியப் பிரதேச மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இந்தேர் சிங் பர்மார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் குந்தாப்பூர் அரசு பி.யூ. கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இஸ்லாமிய மாணவிகளுக்கு தடை விதித்த விவகாரம் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
தற்போது அந்த கல்லூரியில் இஸ்லாமியப் பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவது குறித்து மத்தியப் பிரதேச மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய அவர், ஹிஜாப் பள்ளி சீருடை அல்ல. அதனால் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வருவதைத் தடை செய்ய வேண்டும். இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாரம்பரியம் என்றால் அதனை வீட்டில் பின்பற்ற வேண்டும். சீருடை விவகாரத்தில் துறை ரீதியாக பரிசீலனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர்களின் ஒழுக்கத்திற்காகவே பள்ளிகளில் சீருடை கடைபிடிக்கப்படுகிறது. அடுத்த கல்வியாண்டு முதல் பின்பற்றும் வகையில், பள்ளி சீருடை தொடர்பாக விரைவில், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று கூறினார்.