நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி, மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா காணொலி மூலமாக இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
நாட்டில் தற்போது கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையொட்டி பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்கள் மக்களுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுறுதல்களை வழங்கி வருகின்றன.
இதையொட்டி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், 'கரோனா இன்னும் முடிவடையவில்லை. சில மாநிலங்களில் பாதிப்பு அதிகரிப்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரமிது. பாதிப்பு அதிகரிக்கும் மாநிலங்களில் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்.
பள்ளிக் குழந்தைகளுக்கு தடுப்பூசியும் மூத்தவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசியும் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும். புதிய வகை கரோனா வைரஸ் பரவுகிறதா என்பது குறித்து மாநிலங்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும்' என்று பேசினார்.
மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், தெலங்கானா, ஹரியாணா, குஜராத், பிகார், மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்கள் இதில் கலந்துகொண்டனர்.