காங்கிரஸின் ஒற்றுமைக்கான நடைப்பயணத்தின்போது இன்று காலை கட்சியின் மூத்த தலைவர் கிருஷ்ண குமார் பாண்டே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தி தலைமையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாள்கள் ‘பாரத் ஜோடோ’ நடைப்பயணம் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகின்றது. தமிழகம், கேரளம், கர்நடாகா, ஆந்திரம், தெலங்கானாவை கடந்து மகாராஷ்டிரத்திற்குள் நேற்று இரவு நடைப்பயணம் நுழைந்தது.
ஒவ்வொரு மாநிலத்தில் நுழையும்போதும் அந்தந்த மாநிலங்களின் மூத்த தலைவர்கள் நடைப்பயணத்தில் கலந்து கொள்வர். அதன்படி, இன்று காலை காங்கிரஸ் சேவா தளத்தின் பொதுச் செயலாளரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கேகே பாண்டே(75 வயது) நடைப்பயணத்தில் கலந்து கொண்டார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷுடன் தேசியக் கொடியை ஏந்தியபடி நடந்து சென்றபோது மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அருகில் இருந்தவரிடம் தேசியக் கொடியை கொடுத்துவிட்டு கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக, அவரை மீட்ட நடைப்பயணக் குழுவினர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கேகே பாண்டேவின் உடலுக்கு இன்று பிற்பகல் அஞ்சலி செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.