ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக நீடிக்க விரும்பவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அஜய் மேகன் கடிதம் எழுதியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான அஜய் மேகன், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ராஜஸ்தான் மாநிலத்தின் பொறுப்பாளராக நீடிக்க விரும்பவில்லை என்றும் புதிய பொறுப்பாளரை நியமிக்கும்படியும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் காங்கிரஸ் தலைவர் தேர்தலின்போது ராஜஸ்தான் அரசியலில் நிலவிய குழப்பங்கள் குறித்து கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அவர், தற்போதைய சூழலில் ராஜஸ்தானுக்கு புதிய பொறுப்பாளர் தேவை, ராகுலின் ஒற்றுமை நடைப்பயணம்(பாரத் ஜோடோ) விரைவில் ராஜஸ்தானை அடைய உள்ள நிலையில் மாநிலத்திற்கு புதிய பொறுப்பாளரை நியமிக்க வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் காங்கிரஸ் தலைவர் போட்டிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுவதாக இருந்தது. இதனால் ராஜஸ்தான் முதல்வராக சச்சின் பைலட் பெயர் அடிபட்ட நிலையில் அசோக் கெலாட் ஆதரவாளர்கள் சச்சின் பைலட்டுக்கு எதிராகக் கிளம்பினர். இதனால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதற்கு தீர்வாக, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகி அசோக் கெலாட்டே ராஜஸ்தான் முதல்வராக நீடிக்க முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.