கோவாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் இன்று பாஜகவில் இணைந்தனர்.
கோவாவில் நடந்த முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக பிரமோத் சாவந்த் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், கோவா காங்கிரஸின் எம்எல்ஏக்களான திகம்பர் காமத், மைக்கேல் லோபோ, டெலிலா லோபோ, ராஜேஷ் பால்தேசாய், கேதார் நாயக், சங்கல்ப் அமோன்கர், அலிக்சோ செக்வேரா மற்றும் ருடால்ப் பெர்னாண்டஸ் உள்ளிட்ட 8 பேர் இன்று பாஜகவில் இணைந்தனர்.
40 இடங்களைக் கொண்ட கோவா சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியில் 11 எம்எல்ஏக்கள் இருந்தனர். தற்போது, 8 பேர் விலகியுள்ளதால் காங்கிரஸின் பலம் 3-எம்எல்ஏக்களாகக் குறைந்தது.
கட்சியில் சேர்ந்தபின் முதல்வர் பிரமோத் சாவந்தையும் சந்தித்து வாழ்த்துகளைப் பெறுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.