மோடி அரசு தான் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
காங்கிரஸ் முன்பு பலமுறை ஆட்சிக்கு வந்திருந்தாலும் அது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றவில்லை என்றும் அவர் கூறினார்.
குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக திருத்தப்பட்ட மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்கள் இன்று (டிச.20) மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. அப்போது பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்று பாஜக வாக்குறுதி அளித்தது. அதன்படி தற்போது ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது.
மகளிர் இடஒதுக்கீடு சட்டம் இயற்றுவோம் என்று கூறினோம், அதனையும் நிறைவேற்றி உள்ளோம். இதனால் பெண்களுக்கு சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்தில் கூடுதல் அதிகாரம் கிடைக்க உள்ளது. அதற்கு முன்பு எத்தனையோ முறை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோதும், அதனைச் செய்யவில்லை. மோடி அரசுதான் அதன் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது.
காலனிய ஆட்சிக்கால சட்டங்களான குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக தற்போது திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்களை கொண்டு வந்துள்ளோம்.” என்று கூறினார்.
அதனையடுத்து பாரதிய நியாய சன்ஹிதா, பாரதியா நாகரிக் சுரக்ஷ சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்ய மசோதா ஆகிய மூன்று மசோதாக்களும் மக்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன.