வடகிழக்கை ஏடிஎம் ஆகப் பயன்படுத்தும் காங்கிரஸ்: மோடி குற்றச்சாட்டு!
வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் ஏடிஎம் ஆகப் பயன்படுத்துவதாகவும், அதேநேரத்தில் அமைதி, வளர்ச்சிக்காக பாஜக அஷ்டலட்சுமி வடிவங்களாகக் கருதுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் ஏடிஎம் ஆகப் பயன்படுத்துவதாகவும், அதேநேரத்தில் அமைதி, வளர்ச்சிக்காக பாஜக அஷ்டலட்சுமி வடிவங்களாகக் கருதுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
திமாபூரில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய மோடி கூறுகையில்,
நாகாலாந்தில் பாஜக, என்டிபிபிக்கு பெரும் ஆதரவு உள்ளது. நிரந்தர அமைதியை ஏற்படுத்த பாடுபடுகிறது. வடகிழக்கில் சூழ்நிலைகள் மாறும் என 10 ஆண்டுகளுக்கு முன்பு யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் என்றார்.
சொந்த மண்ணில் உள்ள மக்களை நம்பாமல் நாட்டை நடத்த முடியாது. அவர்களின் பிரச்னைகளை மதித்து அதைத் தீர்க்க வேண்டும்.
முன்னர் வடகிழக்கில் பிளவு அரசியல் இருந்தது. இப்போது அதை தெய்வீக ஆட்சியாக மாற்றியுள்ளோம்.
காங்கிரஸ் ஆட்சியின் போது நாகாலாந்தில் அரசியல் ஸ்திரமின்மை இருந்ததைக் குறிப்பிட்ட அவர், தில்லியிலிருந்து வடகிழக்கு பகுதியை ரிமோட் மூலம் கட்டுப்படுத்தியதாகவும் அதன் வளர்ச்சிக்கான பணத்தைப் பறித்ததாகவும் அவர் கூறினார். அதே நேரத்தில் தில்லி முதல் திமாபூர் வரை வம்ச அரசியலுக்கு முன்னுரிமை அளித்தாகவும் அவர் கூறினார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி(என்டிஏ) நாகாலாந்தை இயக்குவதற்கு அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகிய மூன்றையும் தாரக மந்திரமாக கொண்டுள்ளதாக அவர் கூறினார்.