ஹிமாசல் பிரதேசத்தின் அமைச்சரவை இன்னும் ஓரிரு தினங்களில் விரிவாக்கம் செய்யப்படலாம் என காங்கிரஸ் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு அண்மையில் தலைநகர் தில்லியில் ஹிமாசல் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து காங்கிரஸின் முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
இது குறித்து காங்கிரஸைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: நேற்று மாலை ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் சிங் தில்லி வந்தடைந்தார். அவர் காங்கிரஸின் சில முக்கியத் தலைவர்களுடன் அமைச்சரவை விரிவாக்கம் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டார். இன்னும் ஓரிரு நாட்களில் ஹிமாசல் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படலாம் என்றார்.
அண்மையில், 68 தொகுதிகளைக் கொண்ட ஹிமாசல் சட்டப்பேரவைத் தேர்தலில் 40 தொகுதிகளைக் கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.