மணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள்: சொல்வது முதல்வர்
அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இதுவரை மணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள் சரியான வயதில் திருமணம் செயது கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கியிருக்கும் அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இதுவரை மணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குவகாத்தியில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, பெண்கள் உரிய வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் தாய்மையடைவதில் எந்த சிக்கலும் இருக்காது. ஒரு பெண் தாய்மையடைய 22 வயது முதல் 30 வயது வரை சரியான காலமாக இருக்கும்.
பெண்கள் திருமணத்துக்குப் பிறகு தாய்மையடைய நீண்ட நாள்கள் காத்திருக்கக் கூடாது. அது பிரச்னைகளை ஏற்படுத்தும். இதுவரை திருமணம் ஆகாத பெண்களும் விரைவாக திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலம் அவர் பேசுகையில், மிக இளம் வயதில் தாய்மையடைவதற்கு எதிராக நாம் பேசி வருகிறோம். அதே வேளையில், பலரும் செய்வதைப் போல, தாய்மையடைவதற்கு பெண்கள் அதிக காலம் காத்திருக்கக் கூடாது. கடவுள், ஒவ்வொன்றுக்கும் ஏற்ற வகையில் நமது உடலை படைத்திருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க.. அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துக் கட்ட 3-ல் 2 பங்கு உரிமையாளர்கள் ஒப்புதலே போதும்!
அசாமில், இளம் சிறார்களை திருமணம் செய்யும் கணவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யும் சட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, அடுத்த சில மாதங்களில், இளம் வயது பெண்களை திருமணம் செய்து கொண்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்படவிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். அவ்வாறு கைது செய்யப்படுபவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.