நியூஸ்கிளிக் நிறுவனருக்கு காவல் நீட்டிப்பு: தில்லி நீதிமன்றம் உத்தரவு!
நியூஸ்கிளிக் நிறுவனர் மீதான காவல்துறை விசாரணையை நவம்பர் 2 வரை நீட்டித்து உத்தரவிட்டது தில்லி நீதிமன்றம்
சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்ட (யுஏபிஏ) வழக்கு தொடா்பாக நியூஸ்கிளிக் இணைய செய்தி நிறுவனத்தின் நிறுவனா் பிரபீா் புா்காயஸ்தா, அந்நிறுவனத்தின் மனிதவளப் பிரிவு தலைவா் அமித் சக்ரவா்த்தி ஆகியோருக்கு நவம்பர் 2 வரை காவலை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீனாவுக்கு ஆதரவான பிரசாரத்தில் ஈடுபட பணம் வாங்கியதாக நியூஸ்கிளிக் செய்தி நிறுவனம் மீது யுஏபிஏ சட்டத்தின் கீழ் தில்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.
இதையடுத்து, தில்லி மற்றும் தேசிய தலைநகா் பகுதிகளில் நியூஸ்கிளிக் அலுவலகம், அந்த நிறுவன ஆசிரியா் குழுவினா், ஊடகவியலாளா்கள், அலுவலா்கள் என 46 பேருக்குச் சொந்தமான இடங்களில் காவல் துறையினா் சோதனை மேற்கொண்டனா். பின்னா் பிரபீா் புா்காயஸ்தா, அமித் சக்ரவா்த்தி ஆகியோரை கைது செய்யப்பட்டனர்.
Advertisement
அதனையடுத்து அவர்கள் இருவரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் 15 நாள் நீதிமன்றக் காவல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது காவல்துறை சார்பில் இவர்களின் காவல் நீட்டிக்கப்படவேண்டும் என கோரப்பட்டது. பிரபீர் புர்கயாஸ்தாவின் வழக்கறிஞர் அர்ஷ்தீப் சிங் குரானா இதனை எதிர்த்து வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இறுதியில் பிரபீர் புர்கயஸ்தா மற்றும் அமித் சக்ரவர்த்தி ஆகியோரின் காவலை நவம்பர் 2-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.