முகப்பு
இந்தியா

ராஜஸ்தானில் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்: தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்!

ராஜஸ்தானில் பழங்குடியின பெண் ஒருவர் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு சென்ற சம்பவத்திற்கு தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:56 AM
பகிர்:

ராஜஸ்தானில் பழங்குடியின பெண் ஒருவர் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு சென்ற சம்பவத்திற்கு தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

ராஜஸ்தானில் பிரதாப்கர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு திருமணமான பெண் ஒருவர், வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தியுள்ளனர். மேலும், வியாழக்கிழமை அன்று அந்த பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக கொண்டு சென்றுள்ளனர். இந்த பெண் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். 

இதுகுறித்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. காவல்துறையினர் இதுதொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையம் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

'ராஜஸ்தானின் பிரதாப்கரில் நடந்த கொடூரமான சம்பவத்தை தேசிய மகளிர் உரிமைகள் ஆணையம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஒரு பெண் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு, நிர்வாணமாக்கி விடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு இது நடந்திருந்தாலும், காவல்துறையின் மெத்தனப் போக்கை ஏற்றுக்கொள்ள முடியாது' என்று தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா கூறியுள்ளார் 

மேலும் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவும், ஐபிசி விதிகளின்படி நடவடிக்கை எடுக்கவும் மாநில டிஜிபிக்கு அறிவுறுத்தியதுடன் ஐந்து நாட்களுக்குள் விரிவான அறிக்கையை கோரியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.