இந்தியா மற்றும் பாரத் இரண்டுமே ஏற்கக்கூடியவைதான் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பாரீஸில் மாணவர்களுடனான கலந்துரையாடலின்போது அவரிடம் இந்தியாவின் பெயர் மாற்றம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
ஜி-20 மாநாட்டு அழைப்பிதழில் குடியரசுத் தலைவரை இந்திய குடியரசுத் தலைவர் என குறிப்பிடாமல் பாரத குடியரசுத் தலைவர் என அழைப்பிதழ் அனுப்பப்பட்டதால் நாட்டின் பெயரை மாற்ற முயற்சிப்பதாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. எனினும், பாரதம் என்ற பெயருக்கு ஆதரவாகவும் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வந்தனர். பின்னர், இந்தியாவின் பெயர் மாற்றம் தொடர்பான கேள்விகளுக்கு யாரும் தங்களது கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.
இந்த நிலையில், இந்தியா மற்றும் பாரத் இரண்டுமே ஏற்கக்கூடியவைதான் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்தியா, பாரத் ஆகிய இரண்டு பெயர்களுமே ஏற்றுக்கொள்ளக் கூடியவைதான். இந்தியா மற்றும் பாரத் ஆகிய இரண்டு சொற்களையும் அரசியலமைப்பு பயன்படுத்துகிறது. எங்களது எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா எனப் பெயரிட்டதால் பாஜவுக்கு எரிச்சல் ஏற்பட்டிருக்கலாம் என்றார்.