முகப்பு
இந்தியா

உயிரோடிருப்பவர் இறந்ததாக அறிவித்த மருத்துவமனை, தற்கொலை செய்துகொண்ட மனைவி!

ஒடிசாவில் உயிரோடிருக்கும் கணவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை அறிவித்து தவறான உடலை வழங்கியதால், சோகத்தில் மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:24 PM
கோப்புப்படம்
பகிர்:

ஒடிசாவில் மருத்துவமனையில் ஏற்பட்ட தவறால் மிகப்பெரும் சோகம் நடந்துள்ளது. உயிரோடு சிகிச்சை பெற்றுவரும் நோயாளி இறந்துவிட்டதாகக் கூறி தவறான உடலை வழங்கியுள்ளனர். இதில் மனமுடைந்த நோயாளியின் மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

இந்நிலையில் இறந்ததாகக் கூறப்பட்ட திலிப் சமந்த்ரே உயிருடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரது குடும்பத்திடம் உயிரிழந்த மற்றொரு நோயாளியான ஜோதி ரஞ்சன் மாலிக்கின் உடல் கொடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் அதிகமான தீக்காயங்களுடன் 4 வேலையாள்கள் அனுமதியாகியுள்ளனர். அதில் திலீப் மற்றும் மாலிக் ஆகியோரின் முகங்கள் அடையாளம் காணமுடியாத அளவுக்கு தீக்காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.

அவர்களது சக பணியாளர்கள் மற்றும் அவர்களை பணியமர்த்தியவர் அளித்த தகவல்களின் அடிப்படையில் மருத்துவமனை ஆவணங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அதில் ஏற்பட்ட குழப்பத்தால் இந்தத் தவறு நடந்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

திலீப்பின் குடும்பத்தார் மருத்துவமனை வழங்கிய தவறான உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்துமுடித்துள்ள நிலையில், மாலிக்கின் குடும்பத்தார் அவரது உடலைக் கேட்கின்றனர்.

திலீப் இறந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், மாலிக்காக அடையாளம் காணப்பட்டவர் நினைவு திரும்பி, நான்தான் திலீப் எனக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

காவல்துறையினர் மற்றும் மனோவியல் மருத்துவர்கள் உதவியோடு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவைப்பட்டால் மரபணு பரிசோதனைகள் மேற்கொள்ளலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், நோயாளிகளின் சக பணியாளர்கள் தவறாக அடையாளம் சொன்னதால் மட்டுமே இந்த பிரச்னை ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவர்களின் அலட்சியம் எதுவும் இல்லை எனவும் நிர்வாக தெரிவித்துள்ளது.    

மேலும், இந்த பிரச்னை ஏசிபி அதிகாரியால் கையாளப்படும் என டிசிபி பிரதீக் சிங் தெரிவித்துள்ளார்.   

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

முழு கட்டுரையைப் படிக்க →