ஒருநாள் மணிப்பூர் உங்களை நிராகரிக்கும்: மோடி
“மணிப்பூரை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள்.”
மணிப்பூரை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள் என்றும், ஒருநாள் மணிப்பூர் உங்களை நிராகரிக்கும் என்றும் மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பிரதமர் மோடி மாநிலங்களவையில் இன்று உரையாற்றினார்.
அப்போது, மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி பேசியதாவது:
"மணிப்பூரில் இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 ஆயிரத்துக்கும் அதிகமான எஃப்ஐஆர்-க்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.
மணிப்பூரில் அனைத்துப் பகுதிகளிலும் இயல்பு நிலைக்கு கொண்டுவர அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. வன்முறை சம்பவங்கள் குறைந்து வருகின்றன. அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இன்று பள்ளிகள், கல்லூரிகள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. அமைதியை நிலைநாட்ட அனைத்து தரப்பினருடனும் பேசி வருகிறோம்.
மத்திய உள்துறை அமைச்சர் அங்கு பல வாரங்கள் தங்கியுள்ளார். மணிப்பூரில் ஏற்பட்டுள்ள வெள்ள மீட்புப் பணிகளுக்காக மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது. இன்று இரண்டு தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுபவர்களை எச்சரிக்கிறேன். மணிப்பூரை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள். காங்கிரஸ் ஆட்சியில் 10 முறை மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது. மணிப்பூரும் உங்களை ஒருநாள் நிராகரிக்கும்.” எனத் தெரிவித்தார்.