நாடாளுமன்ற வளாகத்திலிருந்து காந்தி, அம்பேத்கர், சிவாஜி சிலைகள் இடமாற்றம்
நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி, அம்பேத்கர், சிவாஜி சிலைகள் இடமாற்றம் செய்ததற்கு காங்கிரஸ் கண்டனம்
நாடாளுமன்ற வளாகத்தில், கட்டமைப்புகளை மாற்றியமைக்கும் வகையில், மகாத்மா காந்தி, அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதுபோலவே பழங்குடியின தலைவர் பிர்ஸா முண்டா, மகாரானா பிரதாப் ஆகியோரின் சிலைகளும் பழைய நாடாளுமன்றக் கட்டடம் மற்றும் நாடாளுமன்ற நூலகத்துக்கு இடையே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்துக்குள் அமைந்திருந்த மகாத்மா காந்தி சிலை உள்பட தலைவர்களின் சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறது.
Advertisement
Advertisement
காங்கிரஸ் ஊடகத் துறை தலைவர் பவன் கேரா கூறுகையில், மகாராஷ்டிர வாக்காளர்கள் பாஜகவுக்கு வாக்களிக்காததால், சிவாஜி மற்றும் அம்பேத்கர் சிலைகள் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குஜராத்தில், அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறவில்லை என்பதால், மகாத்மா காந்தி சிலையும் அது இருந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தின் முகப்புப் பக்கத்தில் இருந்த சிவாஜி, காந்தி, அம்பேத்கர் சிலைகள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. இது அராஜக நடவடிக்கை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் 18வது மக்களவைக் கூட்டம் ஜூன் மாதம் தொடங்கவிருக்கிறது. துவக்க நிகழ்ச்சி நடைபெறும் நாளில் ஒட்டுமொத்த நாடாளுமன்ற வளாகமும் புதிது போல ஜொலிக்க பல்வேறு ஏற்பாடுகளும் கட்டமைப்புப் பணிகளும் நடந்து வருகின்றன.
நாடாளுமன்ற வளாகத்தில் நடக்கும் கட்டமைப்புப் பணிகளில் ஒன்றாக, காந்தி, சிவாஜி சிலைகள், நாடாளுமன்ற முகப்பிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, பழைய கட்டடம் அமைந்திருக்கும் இடத்தின் ஐந்தாவது நுழைவாயில் அருகே வைக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தின் மூலம், கஜ த்வார் முன்பு, ஒரு மிகப்பரந்த இடம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இடம், குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர், புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் செல்வதற்கான வழியாகவும் பயன்படுத்தப்படவிருக்கிறது.
இந்த பரந்த இடத்தில், அரசு நிகழ்ச்சிகளையும் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை போன்ற நிகழ்வுகளையும் நடத்திக் கொள்ள பயன்படுத்தலாம் எனறு கூறப்படுகிறது.