ராம பக்தர்தான் பிரதமராக முடியும்: யோகி ஆதித்யநாத்
ராம பக்தர்தான் பிரதமராக முடியுமென உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
ராம பக்தர்தான் பிரதமராக முடியும் என்றும் காங்கிரஸ் மற்றும் சமாஜவாதி கட்சிகள் வாக்குவங்கிக்காவும் சமாதானப்படுத்தும் அரசியலுக்காகவும் பயங்கரவாதத்தைக் கையாள்வதில் அலட்சியமாக இருப்பதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சேலம்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ரவீந்திர குஷ்வாஹாவை ஆதரித்து பிரசாரம் செய்யும்போது இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் பேசியதாவது : பயங்கரவாதத்தை சமாளிக்க அப்போதைய அரசிடம் நாங்கள் சொன்னபோது அவர்கள் எப்படி என்று கேட்டார்கள். வாக்குவங்கிக்காவும் சமாதானப்படுத்தும் அரசியலுக்காகவும் பயங்கரவாதத்தை கையாள்வதில் அலட்சியமாக இருந்தனர்.
Advertisement
Advertisement
மாநிலத்தில் சமாஜவாதி கட்சியும் மத்தியில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் இருக்கும்போது காசி, அயோத்தியா, லக்னெள ஆகிய இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. அவர்களது ஆட்சியில் நாட்டில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெறாத இடங்களே இல்லை. அவர்களுக்கு நடவடிக்கை எடுப்பதில் விருப்பம் இல்லை. வாக்குவங்கி மற்றும் சமாதானப்படுத்தும் அரசியலுக்காக அலட்சியமாக இருந்தனர்.
ஆறாம் கட்டத் தேர்தலில் மக்கள் ஆர்வமாக வாக்களிப்பதைப் பார்க்கும்போது, ஜூன் 4 ஆம் தேதி பாஜக தலைமையிலான அரசில் பிரதமர் மோடி 400-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்படப் போகிறார் என்பது உறுதியாகத் தெரிகிறது.
ராம பக்தர் மட்டுமே மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று வருகிற ஜூன் 4 ஆம் தேதி பிரதமர் பதவியில் அமர வேண்டுமென்ற முழக்கம் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் அசாமின் கம்ரூப்பில் இருந்து குஜராத்தின் கட்ச் வரையிலும் எதிரொலிக்கிறது என்றார்.
சேலம்பூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு வருகிற ஜூன் 1 ஆம் தேதி 7-ஆம் கட்டத் தேர்தலில் பதிவுசெய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.