தில்லி கார் வெடிப்பு: அமித் ஷாவின் குஜராத் பயணம் ரத்து!
மத்திய உள்துறை அமைச்சரின் குஜராத் பயணம் ரத்து செய்யப்பட்டது குறித்து...
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் குஜராத் பயணம் ரத்து செய்யப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தில்லியில், செங்கோட்டையின் அருகில் கடந்த நவ.10 ஆம் தேதி இரவு நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் பலியாகினர். மேலும், சுமார் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம், பயங்கரவாதிகளின் சதிச் செயலாக இருக்கக் கூடும் எனக் கருதப்படும் நிலையில், இதுவரை சந்தேகத்தின் அடிப்படையில் 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது.
Advertisement
Advertisement
இதையடுத்து, கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், இந்தச் சம்பவம் குறித்து அவரது தலைமையின் கீழ் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நவ.13 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் குஜராத் பயணம் ரத்து செய்யப்பட்டதாக, காந்தி நகர் மக்களவை உறுப்பினர் பிமல் ஜோஷி கூறியுள்ளார்.
இந்தப் பயணத்தில், அமைச்சர் அமித் ஷா அகமதாபாத் நகரத்தில் உணவுத் திருவிழா மற்றும் புத்தகத் திருவிழா உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகளை துவங்கி வைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
முன்னதாக, தில்லியில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பேற்று பதவி விலக வேண்டுமென, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தில்லி கார் வெடிப்பு! குற்றவாளியுடன் தொடர்புடைய சிவப்புக் காரை தேடும் தில்லி போலீஸ்