முகப்பு
இந்தியா

பிகாரில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி!- நேரலை

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள்.

Updated On : 14 நவம்பர் 2025, 9:31 pm IST
- ANI
பகிர்:
Updated On : 14 நவம்பர் 2025, 7:46 am IST

பிகார் தேர்தல்

243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் சட்டப்பேரவைக்கு கடந்த நவ. 6, 11-இல் இரு கட்டங்களாக (121, 122) தோ்தல் நடைபெற்றது.

7.45 கோடி வாக்காளா்களைக் கொண்ட இந்த மாநிலத்தில் வரலாறு காணாத அளவில் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆண்களைவிட (62.8%), பெண்கள் (71.6%) அதிகம் வாக்களித்தனா்.

Updated On : 14 நவம்பர் 2025, 7:46 am IST

யாருக்கு ஆட்சி?

ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் தலா 101 தொகுதிகளில் போட்டியிட்டன. மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) 29, மத்திய அமைச்சா் ஜிதன்ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா 6, மாநிலங்களவை எம்.பி. உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோா்ச்சா 6 இடங்களில் போட்டியிட்டன.

Advertisement

Advertisement

ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ், விகாஸ்ஷீல் இன்சான் கட்சி, இடதுசாரிகளை உள்ளடக்கிய எதிரணியில் சுமுக உடன்பாடு ஏற்படாததால், தொகுதிப் பங்கீடு அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவில்லை. பெரிய கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளம் 143, காங்கிரஸ் 61 இடங்களில் போட்டியிட்டன.

ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக பிரதமா் மோடி, முதல்வா் நிதீஷ் குமாா், மத்திய அமைச்சா்கள், பாஜக ஆளும் மாநில முதல்வா்கள் உள்ளிட்டோரும், எதிரணியில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனா்.

Updated On : 14 நவம்பர் 2025, 7:46 am IST

நிதீஷ் ஆட்சி தொடருமா?

பிகாரில் சில குறுகிய இடைவெளிகளைத் தவிர 20 ஆண்டுகளாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நீடிக்கிறது. முதல்வா் நிதீஷ் குமாரின் நல்லாட்சி பிம்பம், பெண்களுக்கு ரூ.10,000 உதவித் தொகை, வீடுகளுக்கு 125 யூனிட் இலவச மின்சாரம் போன்ற திட்டங்கள் தங்களது வெற்றியை உறுதி செய்யும் என தேசிய ஜனநாயக கூட்டணி நம்புகிறது.

ஆனால், இந்த முறை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதீஷ் குமார் கருதப்பட்டாலும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Updated On : 14 நவம்பர் 2025, 7:46 am IST

வாக்கு எண்ணிக்கை

மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்புடன் 46 மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. 8.30 மணிக்கு மேல் மின்னணு இயந்திரங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும்.

243 தோ்தல் அதிகாரிகள், 243 பாா்வையாளா்கள் இப்பணியில் ஈடுபட உள்ளனா். தலா ஒரு மேற்பாா்வையாளா், உதவியாளா், நுண் பாா்வையாளருடன் 4,372 வாக்கு எண்ணப்படும் மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேட்பாளா்கள் சாா்பில் நியமிக்கப்பட்ட 18,000-க்கும் அதிகமான முகவா்களும் வாக்கு எண்ணும் நடைமுறையை மேற்பாா்வையிட உள்ளனா் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Updated On : 14 நவம்பர் 2025, 8:01 am IST

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது. காலை 8.30 மணிக்கு மேல் மின்னணு இயந்திரங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும்.

முழு விவரம் : பிகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

Updated On : 14 நவம்பர் 2025, 8:37 am IST

தேஜ கூட்டணி முன்னிலை

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காலை 8.30 நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் உள்ளது.

முழு விவரம் : பிகார் தேர்தல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை!

Updated On : 14 நவம்பர் 2025, 8:56 am IST

ஜன் சுராஜ்

பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி காலை 9 மணி நிலவரப்படி, வெறும் 5 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகின்றது.

Updated On : 14 நவம்பர் 2025, 9:34 am IST

காங்கிரஸ் 12 இடங்களில் முன்னிலை

பிகார் தேர்தலில் 61 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், காலை 9.30 மணி நிலவரப்படி, வெறும் 12 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

முழு விவரம் : பிகார் தேர்தல்: தே.ஜ. கூட்டணி 154 தொகுதிகளில் முன்னிலை!

Updated On : 14 நவம்பர் 2025, 10:28 am IST

தேஜ் பிரதாப் பின்னடைவு

பிகார் தேர்தலில் ராஷ்டீரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவின் சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ் பின்னடைவை சந்தித்துள்ளார்.

மஹுவா சட்டப்பேரவைத் தொகுதியில் ஜனசக்தி ஜனதா தளம் கட்சியின் சார்பாக போட்டியிட்ட தேஜ் பிரதாப் யாதவ், காலை 10 மணி நிலவரப்படி நான்காவது இடத்தில் (1078) உள்ளார்.

Updated On : 14 நவம்பர் 2025, 11:15 am IST

போஸ்டரால் பரபரப்பு

ஜனதா தளத் தலைவர் நிதீஷ் குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள், தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறார்கள். முன்னதாக, அவரது வெற்றியை உறுதி செய்யும் வகையில், புலி இன்னமும் சக்தியோடுதான் உள்ளது என்று சொல்லும் போஸ்டர்கள், நிதீஷ் குமார் வீட்டு வாசலில் ஒட்டப்பட்டுள்ளது.

முழு விவரம்: நிதீஷ் குமார் வீட்டு வாசலில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரால் பரபரப்பு

Updated On : 14 நவம்பர் 2025, 11:17 am IST

முன்னிலை நிலவரம்

வாக்கு எண்ணிக்கைத் தொடங்கி நான்கு மணி நேரத்துக்குப் பின், அதாவது 11 மணி நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி 192 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஜனதா தளம் 84 தொகுதிகளிலும் பாஜக 80 தொகுதிகளிலும் எல்ஜேபி 23 தொகுதிகளிலும் எச்ஏஎம் 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

Updated On : 14 நவம்பர் 2025, 11:42 am IST

நிதீஷ் போட்டியிடாதது ஏன்?

பிகார் வரலாற்றில் நீண்ட கால முதல்வர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான நிதீஷ் குமார், சட்ட மேலவை உறுப்பினராக மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த 1985 பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மட்டுமே போட்டியிட்டு நிதீஷ் குமார் வெற்றி பெற்றுள்ளார். மீண்டும் 1995 பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார்.

Updated On : 14 நவம்பர் 2025, 12:58 pm IST

ஞானேஷ் குமார் Vs பிகார் மக்கள்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கும், பிகார் மக்களுக்கும் இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டிருப்பதாக காங்கிரஸ் மூத்த நிர்வாகி பவன் கேரா தெரிவித்துள்ளார்.

இனிவரும் நேரங்களில் ஞானேஷ் குமார் எவ்வளவு திறமையாகச் செயல்படுவார் என்பது தெரியும் எனத் தெரிவித்துள்ளார்.

Updated On : 14 நவம்பர் 2025, 12:58 pm IST

பூஜ்ஜியம்

பிகார் தேர்தலில் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஒரு தொகுதியில்கூட முன்னிலை பெறவில்லை.

பிகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 238 இடங்களில் போட்டியிட்ட ஜன் சுராஜ் கட்சி, மக்களின் மூன்றாவது தேர்வாக இருக்கும் என்று கருதப்பட்டது.

Updated On : 14 நவம்பர் 2025, 1:04 pm IST

பிகாரில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி!

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 190 இடங்களில் முன்னிலை பெற்று வெற்றியை உறுதி செய்திருக்கிறது.

முழு விவரம் : பிகாரில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி!

Updated On : 14 நவம்பர் 2025, 4:13 pm IST

ராகுல் பிகார் பயணம் மேற்கொண்ட தொகுதிகளில் எல்லாம் காங்கிரஸ் பின்னடைவு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கடந்த ஆகஸ்ட் மாதம் வாக்குத் திருட்டைக் கையிலெடுத்து, பிகாரில் வாக்காளர் அதிகார பயணம் மேற்கொண்ட பகுதிகளில் உள்ள தொகுதிகளில் எல்லாம் காங்கிரஸ் பின்னடைவைச் சந்தித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முழு விவரம் : பிகாரில் ராகுல் பிரசாரம் செய்த தொகுதிகளில் எல்லாம் காங்கிரஸ் பின்னடைவு

Updated On : 14 நவம்பர் 2025, 4:15 pm IST

சமூக-பொருளாதார குறியீடுகளில் பின்தங்கியிருக்கும் பிகார்! ஆனால்?

2022ஆம் ஆண்டு திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில், மனித மேம்பாட்டு குறியீட்டின்படி, பிகார், 27 மாநிலங்களில் பின்தங்கி கடைசி இடத்தில் இருந்தது.

முழு விவரம்: சமூக-பொருளாதார குறியீடுகளில் பின்தங்கியிருக்கும் பிகார்! ஆனால்?

Updated On : 14 நவம்பர் 2025, 4:15 pm IST

முஸ்லிம் மக்கள் அதிகம்கொண்ட தொகுதிகளையும் கைப்பற்றுகிறதா தேஜ கூட்டணி?

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வரும் நிலையில், முஸ்லிம் சமுதாய மக்களை அதிகம் கொண்ட தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் இருப்பதை நிலவரங்கள் காட்டுகின்றன.

முழு விவரம்: முஸ்லிம் மக்கள் அதிகம்கொண்ட தொகுதிகளையும் கைப்பற்றுகிறதா தேஜ கூட்டணி?

Updated On : 14 நவம்பர் 2025, 4:22 pm IST

பிகாரின் ஒரே முதல்வர்: ஆளுங்கட்சியின் எக்ஸ் பதிவு உடனடி நீக்கம்!

பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்து வரும்நிலையில், பிகாரில் நிதிஷ்குமார்தான் என்றுமே முதல்வர் என்று ஆளுங்கட்சியான ஒருங்கிணைந்த ஜனதா தளம் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதுடன், அதனை உடனடியாக நீக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, நிதிஷ்குமார் தலைமையில் தேர்தலில் போட்டி என்றுதான் பாஜக கூறியதே தவிர, அவர்தான் முதல்வர் என்று பாஜக கூறவில்லை என்ற கருத்துகளும் சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இருப்பினும், 20 ஆண்டுகளாக முதல்வராக இருந்துவரும் நிதிஷ்குமாரை ஒருபோதும் தவிர்த்துவிட முடியாது என்று பாஜக நன்கு அறிந்திருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.

முழு விவரம்: பிகாரின் ஒரே முதல்வர் - ஆளுங்கட்சியின் எக்ஸ் பதிவு உடனடி நீக்கம்!

Updated On : 14 நவம்பர் 2025, 8:03 pm IST

மஹுவா தொகுதி: லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் தோல்வி

பிகாரின் மஹுவா தொகுதியில் லாலுவின் மகன் தேஜ் பிரதாப் தோல்வியை தழுவினார்.

அவர் 35,703 வாக்குகளைப் பெற்று 3ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்ட சஞ்சய் குமார் சிங்(ராம் விலாஸ்) 87,641 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

Updated On : 14 நவம்பர் 2025, 8:46 pm IST

தேர்தல் ஆணையம் மீதான மக்களின் நம்பிக்கை வலிமை பெற்றுள்ளது: பிகார் வெற்றி குறித்து பிரதமர் பேச்சு! 

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி தேர்தல் ஆணையத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் வலிமைப்படுத்தியுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (நவ. 14) காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியி 203 தொகுதிகளில் முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

Updated On : 14 நவம்பர் 2025, 9:30 pm IST

பிகார் பேரவைத் தேர்தல்: 6 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி

இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதில் 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த 2020 தேர்தலில் 70 தொகுதிகளில் போட்டியிட்டு 19 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.