செளதி பேருந்து விபத்து: பலியான இந்தியர்கள் குடும்பத்துக்கு உதவ தூதரகத்துக்கு உத்தரவு! - ஜெய்சங்கர்
செளதி பேருந்து விபத்தில் பலியான இந்தியர்களின் குடும்பங்களுக்கு உதவ உத்தரவிட்டிருப்பது பற்றி...
செளதி அரேபியா பேருந்து விபத்தில் பலியான இந்தியர்களுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தூதரகங்களுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து செளதி அரேபியாவுக்கு உம்ரா புனிதப் பயணம் மேற்கொண்டவர்கள் பயணித்த பேருந்து மதீனாவுக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு டீசல் டேங்கர் லாரி மீது விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 20 பெண்கள், 11 குழந்தைகள் உள்பட 42 பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
இந்த நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“மதீனாவில் இந்தியர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானது அறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் மற்றும் குடும்பங்களுக்கு ரியாத் தூதரகம் மற்றும் ஜெட்டா துணைத் தூதரகம் முழு ஆதரவு அளித்து வருகின்றன.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜெட்டா துணைத் தூதரகம் வெளியிட்டிருக்கும் பதிவில், 24 மணிநேர கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை அறிய 8002440003 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
பாதிக்கட்டவர்கள் பெரும்பாலானோர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், தெலங்கானா அரசும் கட்டுப்பாட்டு மையம் அமைத்து ஒருங்கிணைத்து வருகின்றது.