ராஜஸ்தானில் ஒரே இரவில் 48 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
ராஜஸ்தானில் ஒரே இரவில் 48 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டது குறித்து...
ராஜஸ்தானில், முதல்வரின் கூடுதல் தலைமைச் செயலாளர் உள்பட 48 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான் அரசின் தலைமைச் செயலாளராக, சமீபத்தில் வி. ஸ்ரீனிவாஸ் பொறுப்பேற்றார். அதன்பின்னர், அரசு நிர்வாகத்தின் மிகப் பெரிய மாற்றமாக நேற்று (நவ. 21) இரவு முதல்வரின் கூடுதல் தலைமைச் செயலாளர் உள்பட 48 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா அரசின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ஷிகர் அகர்வால் தொழில்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், பொது சுகாதாரம் மற்றும் பொறியியல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த அகில் அரோரா முதல்வரின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கைகளின் மூலம் தொழில்கள், நிதி, போக்குவரத்து, மருத்துவம், சுற்றுலா, வருவாய், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு உள்ளிட்ட 18 துறைகளில் கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள் மற்றும் செயலாளர் நிலை அதிகாரிகள் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஒரு வழக்கமான நிர்வாகப் பயிற்சி என்றும், நிர்வாகம் மேம்பாடு மற்றும் சிறந்த ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் ராஜஸ்தான் மாநில அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கொல்கத்தாவில் பயங்கர நிலநடுக்கம்: வீடு, கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி