பெற்றோரை பராமரிக்க தவறினால் ஊதியத்தில் ரூ. 10,000 பிடித்தம்: தெலங்கானாவில் மசோதா நிறைவேற்றம்
பெற்றோரை பராமரிக்கத் தவறும் ஊழியர்களிடமிருந்து ரூ. 10,000 சம்பளம் பிடித்தம்: தெலங்கானாவில் மசோதா நிறைவேற்றம்
ஹைதராபாத் : பெற்றோரை கவனிக்கத் தவறும் ஊழியர்களிடமிருந்து ரூ. 10,000 சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று தெலங்கானா பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
தெலங்கானா சட்டப்பேரவையில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) ‘பெற்றோர் நலனுக்கு ஆதரவளிக்கும் தெலங்கானா ஊழியர்கள் பொறுப்பேற்றல் மற்றும் கண்காணிப்பு மசோதா, 2026’ நிறைவேற்றப்பட்டது. மூத்த குடிமக்களுக்கான வருவாய் பாதுகாப்பை உறுதிசெய்வதை இந்த மசோதா இலக்காகக் கொண்டுள்ளது.
இது குறித்து பேசிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ‘இந்த நாட்டில் ஏற்கெனவே தேசிய அளவிலான சட்டம், ‘பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல சட்டம், 2007’ இருந்தாலும் அச்சட்டத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக புதிய மசோதா இருக்கும் என்று தெரிவித்தார்.
அதில் குறிப்பிடும்படியாக, தனியார் துறை ஊழியர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவின்படி, பொது மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் ஆகியோர் தங்களது வயதில் மூத்த பெற்றோர்களை பராமரிப்பதை கட்டாயமாக்கப்படுகிறது. தவறும்பட்சத்தில், அந்த நபரின் ஊதியத்திலிருந்து 15 சதவீதம் அல்லது ரூ. 10,000, இவற்றில் எது குறைவோ அந்தத் தொகையை தங்களது பெற்றோர்களுக்கு அவர்கள் வழங்குவதை கட்டாயமாக்குகிறது.