வங்கதேச விவகாரம்: நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கிறார் ஜெய்சங்கர்!
மாநிலங்களவையில் 2.30 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்கிறார் ஜெய்சங்கர்.
வங்கதேச விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கிறார் மத்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்.
வங்கதேசத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக போராட்டம் வெடித்து பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்துவிட்டு, நாட்டைவிட்டு வெளியேறிய விவகாரம் தொடர்பாக புது தில்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், வங்கதேச விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பிற்பகல் 2.30 மணிக்கு மத்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார். இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 3.30 மணிக்கு மக்களவையில் விளக்கம் அளிக்கவுள்ளார்.
இந்திய நாட்டின் நலன் சார்ந்த விவகாரம் என்பதால், காங்கிரஸ் எம்.பி.யும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியும், இது தொடர்பான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷேக் ஹசீனா இந்தியாவில் தங்கியிருப்பதாகவும், அவரது எதிர்கால திட்டம் பற்றி மத்திய அரசு அறிந்திருப்பதாகவும், அவருக்குப் போதுமான நேரம் கொடுக்கப்படும் என்றும் மத்திய அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.