சென்னை, தண்டலம் அருகில் இருக்கும் அயல்மாநில கலாச்சார கேளிக்கை கிராமம் ஒன்றுக்கு நேற்று சென்னையைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் துணையுடன் சுற்றுலா
சென்றிருக்கிறார்கள். மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் நிறைந்த அந்த குழு நேற்று முன் தினம் கேளிக்கை கிராமத்திற்குச் சென்றிருக்கிறது. முற்பகலில் சந்தோஷமாக கேளிக்கை விடுதியைச் சுற்றி வந்த மாணவர்கள் மதிய உணவுக்குப் பின் ஆசிரியர்கள் அனைவரும் ஓரிடத்தில் ஓய்வெடுக்கச் சென்று விட தனியாக ஓர் அறையில் அங்கிருந்த வடமாநில பணியாளர்களிடம் மாட்டிக் கொண்டனர். அப்போது தொடக்கப் பள்ளி மாணவர்கள் என்றும் பாராமல் அந்தக் குழந்தைகளை கேளிக்கை விடுதியைச் சேர்ந்த பணியாளர்கள் அடித்து உதைத்ததாக நேற்று முதல் செய்தி பரவி வருகிறது. முன்பே தங்கள் குழந்தைகளுடன் விடுமுறை தினங்களில் அந்த கிராமத்திற்கு சென்று வந்தவர்கள் என்ற முறையில் சென்னை வாழ் மக்கள் பலருக்கும் இந்தச் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
வடமாநிலமொன்றின் கலாச்சாரப் பெருமைகளையும் பாரம்பர்ய விளையாட்டுக்கள் மற்றும் நடனங்களையும் தமிழகத்தில் பரப்பும் வகையில் முழுக்க முழுக்க வீர தீர சாகச விளையாட்டுகள், பொம்மலாட்டம், யானைச்சவாரி, குதிரைச் சவாரி, மாட்டுவண்டிச் சவாரி, ஒட்டகச் சவாரி, பொய்க்கால் குதிரை, எனப் பல்வேறு விதமான கேளிக்கைகள் நிரம்பிய அந்த கிராமத்தின் நுழைவாயிலில் விருந்தினர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் மேள தாளங்களுடனும், பொய்க்கால் குதிரை ஆட்டத்துடனும், மஞ்சள், குங்குமம் இட்டு மலர் தூவி வரவேற்கும் விதமே அலாதியானதாக இருக்கும். விடுமுறை நாட்களில் சென்னை வாழ் மக்கள் குடும்பம் குடும்பமாக இங்கே வருகை தருவது வழக்கமான ஒன்று. தனிப்பட்ட பார்வையாளர்களுக்கு மாலை 4 மணிக்கு மேல் அனுமதி. அதே சமயம் பள்ளி அல்லது கல்லூரி மாணவர்களது சுற்றுலா என்றால் பகலிலும் இங்கு அனுமதி உண்டு. தவிர இங்கு தமிழ், தெலுங்கு, கன்னடத் திரைப்படங்களுக்கான படப்பிடிப்புகளும், விளம்பரங்களுக்கான படப்பிடிப்புகளும் கூட நடத்தப்படுவதுண்டு.
நேற்று முன் தினம் சென்னையைச் சேர்ந்த தனியார் பள்ளியொன்றின் மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஆசிரியர்கள் துணையுடன் சென்றிருந்த போதும் இந்த கேளிக்கை கிராமத்தில் அங்கிருந்த பணியாளர்களால் தாக்குதலுக்கு உட்படுத்தப் பட்டதாக வந்த செய்தி கண்டனத்திற்குரியதாக மட்டுமல்ல மிகுந்த மன வருத்தத்துக்கு உரியதான ஒன்றாகவும் தற்போது அமைந்திருக்கிறது.