நவீன மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் காரணமாக பல வேலைகள் எளிதாக மாறினாலும், அதே காரணத்தால் குழந்தை வளர்ப்பு சவாலாக மாறியிருக்கிறது.
காரணம், இது என்ன, அது என்ன என்று கேள்விகள் கேட்டு பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து தெரிந்து கொண்ட பல விஷயங்களை தற்போது யாருக்கும் தெரியாமல் அவர்கள் கையில் இருக்கும் கைப்பேசி சொல்லிக்கொடுத்து விடுகிறது.
பெற்றோர் ஒரு விஷயத்தை விளக்கும் போது, அவர்களது வயதுக்கு ஏற்பட சொல்லக் கூடாததை மறைத்துவிட்டு, சொல்ல வேண்டியது அவர்களது அறிவுக்குப் புரியும் வகையில் சொல்லிக்கொடுப்பார்கள்.
இதையும் படிக்க.. ஆயுதப்படை மாற்றம்தான் அதிகபட்ச தண்டனையா? உயிரின் விலை என்ன?
ஆனால் கைப்பேசியோ அப்படியெல்லாம் பார்க்காது. வயதாவது, அறிவாவது.. இதோ இதுதான் விஷயம் என தெள்ளத் தெளிவாகக் கூறிவிடும். தனால்தான், குழந்தைகள் வளர்ப்பும், கவனிப்பும் சவாலாக மாறிவிட்டது.
இதற்கு என்னவெல்லாம் செய்யலாம்..
குழந்தைகளின் கைப்பேசியை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். அவர்கள் எவ்வளவு நேரம் அதனைப் பயன்படுத்துகிறார்கள். என்னவெல்லாம் பார்த்திருக்கிறார்கள் என்பதை.
ஒரு பிரச்னை என்று பிள்ளைகள் பெற்றோரிடம் சொல்லும் போது, அப்படி ஏன் செய்தாய், இப்படி ஏன் செய்தாய் என்று பிள்ளைகளைத் திட்டாமல், அதிலிருந்து விடுபட வழி சொல்லுங்கள். திட்டினால், அடுத்த பிரச்னை உங்கள் காதுகளுக்கு வரவே வராது.
முன்மாதிரியாக மாறுங்கள். நீங்கள் எப்படிப்பட்டவராக இருந்தாலும், உங்கள் பிள்ளைகள் உங்களைப் பார்த்துதான் வளர்க்கிறார்கள் என்பதால், அவர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுங்கள்.
அவர்களது பழக்க வழக்கங்கள், மகிழ்ச்சி, மன அமைதி, தெளிவான சிந்தனைகளை பெற்றோர்தான் உறுதி செய்ய வேண்டும்.
எது நடந்தாலும் பெற்றோரிடம் சொல்லும் அளவுக்கு பிள்ளைகளிடம் நெருங்கிய நட்புறவை பாராட்டுங்கள். அவர்களது நண்பர்களாகக் காட்டிக்கொள்ளுங்கள்.
நமக்குப் பிடிக்கிறதா? பிடிக்கவில்லையா? தெரியுமா? தெரியாதா என்பதை மிகச் சரியாக கண்டுபிடித்து அதை வெளிப்படுத்த வேண்டும் என்பதை பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பிரச்னைகளை தாங்களாகவே எதிர்கொண்டு சமாளிக்கும் வித்தையை பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டும். எது நடந்தாலும் பிள்ளைகளை நீங்களே முன்னின்று வழிநடத்தக் கூடாது.
அவர்களது வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை தினமும் காதுகொடுத்துக் கேளுங்கள்.