மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை - சென்னை அணிகள் மோதுகின்றன.
11 ஆட்டங்களில் 2-ல் மட்டும் வெற்றி பெற்றுள்ள மும்பை அணி, 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
சிஎஸ்கே அணி,11 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 9-ம் இடத்தில் உள்ளது. பிளேஆஃப்புக்கான போட்டியில் இன்னமும் உள்ளது.
இந்நிலையில் மும்பைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே தோற்றால், போட்டியிலிருந்து வெளியேறிவிடும். பிளேஆஃப் வாய்ப்பும் பறிபோய்விடும். அதனால் மும்பைக்கு எதிராக ஜெயிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளது தோனி தலைமையிலான சிஎஸ்கே.
மீதமுள்ள 3 ஆட்டங்களிலும் சிஎஸ்கே வென்றால் மட்டுமே பிளேஆஃப் கனவு காண முடியும். அதுதான் யதார்த்த நிலையாக உள்ளது.
சிஎஸ்கேவின் நெட் ரன்ரேட் 0.028 என ஓரளவு ஆரோக்கியமாக உள்ளது. இதனால் அடுத்தடுத்து வெற்றிகள் பெறும்போது நெட் ரன்ரேட் இன்னும் நன்றாக அமையும்.
மீதமுள்ள 3 ஆட்டங்களிலும் வென்றால் சிஎஸ்கே கைவசம் 14 புள்ளிகள் இருக்கும்.
அதிகப் புள்ளிகளைக் கொண்டிருக்கும் குஜராத், லக்னெள ஆகிய அணிகளைத் தவிர 7 அணிகள் 14 புள்ளிகளுடன் லீக் சுற்றை முடிக்கவும் வாய்ப்பு உள்ளது. (14 புள்ளிகளைக் கொண்டுள்ள ராஜஸ்தானும் ஆர்சிபியும் இனி நேரடியாக மோதுவதில்லை என்பதால் இரு அணிகளில் ஒன்று கட்டாயம் 16 புள்ளிகள் பெறும் வாய்ப்பு இல்லை.)
ரன்ரேட்டின் அடிப்படையில் கடைசி இரு பிளேஆஃப் இடங்கள் நிர்ணயம் செய்யப்படும் என்கிற சூழல் உருவானால் என்ன நடக்கும்?
மைனஸில் இல்லாத நெட் ரன்ரேட்டைக் கொண்டிருக்கும் சிஎஸ்கே அணி, மீதமுள்ள 3 ஆட்டங்களையும் வென்றால் நெட் ரன்ரேட் அடிப்படையில் பிளேஆஃப்புக்குத் தகுதி பெறும் வாய்ப்பு உருவாகலாம். இன்னும் நிறைய ஆட்டங்கள் உள்ளன. மே 22 வரை லீக் சுற்று நடைபெறப் போகிறது. காத்திருப்போம்.